நிரல்
மார்ச் 31 22:58

வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

(முல்லைத்தீவு, ஈழம் ) இலங்கை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ரணில்- மைத்திரி அரசாங்கத்தில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக்கோரி திங்கட்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் குறித்த வீட்டுத்திட்டப் பயனாளிகளான தமிழ் மக்களினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் நகரில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தின் முன் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்ட வீட்டுத்திட்ட பயனாளிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
மார்ச் 30 09:07

சுகாதாரத் தொண்டர்கள் 30 நாட்களாகத் தொடர் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குறித்த போராட்டம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரோ அல்லது மாகாண சுகாதார அமைச்சு சார்ந்த உயர் அதிகாரிகளோ உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததினால், சுகாதாரத் தொண்டர்கள் தொடர்ச்சியாக தமது போராட்டத்தைப் பல்வேறு கஸ்டங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.
மார்ச் 29 22:37

திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமம் முடக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகம் வடக்கின் யாழ் மாநகரில் கொரோனா தொற்று மிக தீவிரமாகப் பரவி வரும் நிலையில் திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமம் அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் யாழ் கல்வி வலயத்திற்குள் உள்ள 104 பாடசாலைகளையும் இன்று திங்கள் தொடக்கம் ஒரு வாரத்திற்கு மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ் நகரில் நேற்றும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நோய்த் தொற்று பரவாதிருக்க நகரின் வேறு சில பகுதிகளையும் இன்று திங்கள் கிழமை முடக்கும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 29 16:55

குரங்குகளின் தொல்லைகளைத் தடுக்கத் துப்பாக்கிகள் கோரப்படுகின்றன

(கிளிநொச்சி, ஈழம்) குரங்குகளின் அட்டூழியத்தைத் தடுப்பதற்கு துப்பாக்கிகளைத் தந்து மக்களைப் பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றுமாறு முல்லைத்தீவு மாவட்ட இணைத் தலைவர்களான வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர்களிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாகத் துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் அம்பலவாணர் அமிர்தலிங்கம் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தார். கடந்த செவ்வாய் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் முல்லை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வேளையே குறித்த கோரிக்கையைத் தான் முன்வைத்ததாகத் துணுக்காய் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
மார்ச் 27 07:35

யாழ் நகரின் சில பகுதிகள் முடக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் பகுதியான வட மாகாணம் யாழ் மாவட்டத்தில் சென்ற வியாழக்கிழமை கொரோனா நோய்த் தொற்றுடன் 77 பேர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 27 புதிய நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. கேதிஸ்வரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தீவிரமாகப் பரவிவரும் நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் குறித்த நோய் பரவல் ஏற்பட்டு வைத்தியர்கள் உட்பட பலர் கொரோனா நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
மார்ச் 27 06:54

தீர்மானத்தில் புவிசார் அரசியல் நோக்கம் மாத்திரமே என்கிறார் அனந்தி

(யாழ்ப்பாணம், ஈழம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடந்த செவ்வாய் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இன அழிப்பு தொடர்பிலான விடயங்கள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அதனை வெற்றுப் பிரேரணையாகவே தான் கருதுவதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கட்சியின் தலைவியும் வட மாகாண சபையின் முன்னாள் பெண் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்தார். சொந்தத் தேசத்திலேயே ஒரு இன அழிப்பிற்கு முகம் கொடுத்து நீண்ட நாட்களாக உரிய நீதி அதற்கு கிடைக்கப்பெறும் எனும் எதிர்பார்பில் இருந்த ஒரு இனத்தின் அபிலாசைகளும் மற்றும் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஒட்டுமொத்தமாகத் தகர்த்தெறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மார்ச் 26 05:58

தமிழக மீனவர் 54 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு மாகாணக் கடற்பரப்பில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 54 இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று வியாழன் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த செவ்வாய் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரனைக்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்காது நடுநிலைமை வகித்ததிற்கான இலங்கையின் பழிவாங்கும் நடவடிக்கையே தமது மீனவர்களின் குறித்த கைது என தமிழ் நாட்டு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 24 18:52

தீர்மானம் தொடர்பாக விளக்கமளிக்கும் இலங்கை அரசாங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தாதென்று அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமென்றும், ஐக்கிய நாடுகள் சபையின் படைகள் இலங்கைக்கு வருமெனவும் சிங்கள இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லையெனவும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறினார். கொழும்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் கெகலிய ரம்புக்வெல, மனித உரிமைச் சபையின் தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக விரைவில் கருத்து வெளியிடும் என்றும் கூறினார்.
மார்ச் 23 23:23

இலங்கை குறித்த தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன்று செவ்வாய்க்கிழமை 22 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பதினொரு நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. போர்க்குற்றம் இருதரப்பு பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் மத்திரமே தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் கோரிய இன அழிப்புக்கான சர்வதேச நீதி குறித்து எதுவுமே கூறப்படவில்லை. அதேவேளை, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
மார்ச் 22 22:42

நானாட்டான் அருவி ஆற்றை மையப்படுத்தி மண் அகழ்வு

(மன்னார், ஈழம் ) தாயகப் பிரதேசமான வட மாகாணம் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அருவி ஆற்றை மையப்படுத்தி கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடற்ற மண் அகழ்வினால் இப்பகுதியின் நிலக்கீழ் நீர், உவர் நீராக மாற்றமடைந்து நூற்றுக்கணக்கான ஏழைத் தமிழ் குடும்பங்களின் பல நூறு ஏக்கர் தோட்டச் செய்கைகள் கடும் பாதிப்படைந்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபைத் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி கூர்மைச் செய்திக்கு தெரிவித்தார். மேலும் நானாட்டான் பகுதியில் உள்ள பல குடிநீர் கிணறுகள் குறித்த மணல் அகழ்வினால் நீரின்றி காணப்படுவதினால் இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடும் தலைதூக்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.