செய்தி: நிரல்
மே 04 23:03

சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் மீது புலனாய்வுப் பொலிஸார் விசாரணை

(வவுனியா, ஈழம்) மலையகத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாழும் மாற்றுச் சிந்தனை கொண்ட இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மற்றும் ஆசிரியர்கள் என பலரும் இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கண்காணிப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. இவ்வாறான விசாரணைகள், கண்காணிப்புகளினால் தாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைச் சட்டத்தரணிகளிடம் முறையிட்டுள்ளனர்.
மே 03 17:05

மன்னார் மாவட்ட சிறுபோக நெற்செய்கை தொடர்பாக உரையாடல்

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் 2020 மற்றும் 2021 வருடத்திற்கான பெரும்போக நெற்செய்கையின் அறுவடைப் பணிகள் அனைத்தும் விவசாயிகளினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுபோக நெற்செய்கைக்கு அவர்கள் தயாராகி வருவதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கமநல சேவை அபிவிருத்தித் திணைக்களம் மன்னார் மாவட்டத்தில் உள்ள அதன் 12 கமநல சேவை நிலையங்கள் ஊடாக மேற்கொண்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
மே 01 23:25

தமிழ் அரசியல் கைதியின் தந்தை மரணம்

(வவுனியா, ஈழம்) இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனின் விடுதலையை எதிர்பார்த்து 12 வருடங்களாக காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி சடங்கில்கூட மகன் கலந்து கொள்ள முடியாததால் உறவுகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் வீதியை சேர்ந்த 79 வயதான எஸ்.இராசவல்லவன் என்பவரே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
ஏப். 30 14:53

வேகமாகப் பரவிவரும் கொரோனா- பொது முடக்கம் வருமா?

(வவுனியா, ஈழம்) இலங்கையின் பல மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தொற்று நோய் சிகிச்சைக்கான பல வைத்தியசாலைகள் கொவிட் தொற்றாளர்களினால் நிரம்பி வழிகின்றது. கொழும்பு. களுத்துறை, கம்பஹா, குருநாகல் மாவட்டங்களில் புதிய கொவிட் நோய் தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்படும் நிலையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துச் செல்கின்றது. இந்த நிலையில் கொவிட் - 19 ன் மூன்றாவது அலையில் இலங்கை நாடு சிக்கித் தவிக்கும் சூழ்நிலையில் கோட்டபாய ராஜபக்ஸ தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.
ஏப். 26 23:31

ரிஷாட் பதியுதீன் 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணையில்

(வவுனியா, ஈழம்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் என்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக அவருக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லையெனக் கூறி 2019 ஆம் ஆண்டு டிசம்பர மாதம் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் எவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட முடியுமெனவும் அதுவும் நீதிமன்ற உத்தரவின்றி கைது செய்ய முடியுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏப். 24 13:37

ரிஷாட் பதியுதீன் அதிகாலை கொழும்பில் திடீரெனக் கைது

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் முன்னாள் கைத்தொழில் வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது இளைய சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக இன்று சனிக்கிழமை அதிகாலை இலங்கை பொலிஸாரின் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டைச் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னாள் அமைச்சரை அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.
ஏப். 23 21:56

சிங்கள மீனவர்களை விடுவிப்பதுபோன்று, தமிழ் மீனவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை

(மன்னார், ஈழம் ) இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதாகும் தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களை இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு துரிதமாக விடுதலை செய்யும் இலங்கை அரசாங்கம், இந்தியக் கடற்படையினரால் கைதாகும் வட மாகாண மீனவர்களின் விடுதலை தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என வட மாகாணக் கடற்றொழில் இணையத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என். முகம்மது ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஏப். 23 06:01

வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு மிகுதிப் பணம் வழங்கப்படவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரிவில், இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டிய மிகுதிப் பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது. முன்னைய அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை அடுத்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் புறந்தள்ளி செயற்படுவதால் வலி.மேற்கில் 1039 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
ஏப். 19 22:51

சிறீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் மேலும் குழப்பங்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்பன்வில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வெளியேறினர். இன்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்ற கூட்டத்தில் வாக்குவாதம் இடம்பெற்றது. மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு அணியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக மற்றொரு அணியும் பிரிந்து வாக்குவாதப்பட்டதாகவும் மற்றுமொரு அணி பசில் ராஜபக்சவை ஆதரித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது.
ஏப். 18 19:34

மீனவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள்

(மன்னார், ஈழம் ) இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள புழல் சிறைச்சாலையில் கடந்த ஐந்து வாரங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மீனவர்களான தமது கணவன்மார்கள் இருவரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் அதன் வெளிவிவகார அமைச்சரும் மேற்கொள்ள வேண்டுமென சிறையில் உள்ள மன்னார் மாவட்ட மீனவர்கள் இருவரின் மனைவிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாணம் மன்னார் மாவட்டம் பேசாலை எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான 30 வயதுடைய அருண் பிரசானியா டலிமா மற்றும் 37 வயதுடைய றேகன் நிசாந்தினி மஸ்கிரிஞ்சே ஆகிய இரண்டு தமிழ் பெண்களே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.