செய்தி: நிரல்
ஜூன் 16 19:49

மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள்- மாவட்ட வைத்தியசாலைகள் கொழும்பு நிர்வாகத்தில்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தில் மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள நான்கு மாவட்டப் பொது வைத்தியசாலைகளை இலங்கை மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றது. கொழும்பு ஐனாதிபதி செயலகத்தில் கடந்த 14ம் திகதி திங்கள் மாலை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்படி வட மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்ட பொது வைத்தியசாலைகள் உட்பட ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளை இலங்கை மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் பொறுப்பில் எடுப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15 22:15

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு திடீரென ஒத்திவைப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை புதன்கிழமை சந்திக்கவிருந்த நிலையில் அந்தச் சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திப்பு நடைபெறாதெனவும் பிறிதொரு தினத்தில் குறித்த சந்திப்பு இடம்பெறும் என்றும் கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்துள்ளது. இதனை கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்தரன் ஊடகங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஜூன் 14 22:32

முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸார் உத்தரவு- படிவங்கள் வழங்கப்பட்டன

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் வீடுகளில் தங்கியிருப்பவர்களின் விபரங்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். பதிவதற்கான படிவங்கள் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசக் குடியிருப்பாளர்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறலாமென மக்கள் சந்தேகிக்கின்றனர். முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களைப் பதிவு செய்யும் நோக்கம் தொடர்பாகப் பொலிஸார் எதுவுமே கூறவில்லை என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
ஜூன் 13 19:05

வடமாகாணத்தில் போதைப்பொருட் கடத்தல்கள் தொடருவதாக இலங்கைப் பொலிஸார் கூறுகின்றனர்

(மன்னார், ஈழம் ) இலங்கை அரசாங்கத்தினால் கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதிலும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணத்தின் சில பகுதிகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோதப் போதைவஸ்து கடத்தல் அதிகரித்துள்ளன. அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டு பகுதியில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் வட மாகாண மாவட்டங்களுக்கு போதை பொருட்கள் கடத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருட் கடத்தல்களுக்கு இலங்கைப் பொலிஸார், படை அதிகாரிகள் சிலர் மறைமுக ஆதரவு வழங்கி ஊக்குவித்ததாக மக்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர்.
ஜூன் 12 23:43

தமிழர்கள் 24 பேர் தமிழ் நாட்டின் மதுரை நகரில் கைது

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த 27 தமிழர்கள் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவின் தமிழ் நாட்டு மாநிலம் மதுரை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்களில் இரண்டு பெண்கள் உட்பட ஒரு குழந்தை அடங்குவதாகவும் அவர்கள் இந்தியாவின் குடியகல்வுக் குடிவரவுச் சட்டங்களை மீறி கடவுச்சீட்டுகள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இந்தியா கியு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.