செய்தி: நிரல்
செப். 14 22:32

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் பதவி நீக்கம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்றுத் திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்ட இலங்கை விசேட வர்த்தமானியில் வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸினால் குறித்த பதவி நீக்க அறிவித்தல் பிரசூரிக்கபட்டுள்ளதுடன் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் இவரின் பதவி வரிதாக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்படடுள்ளது.
செப். 12 20:53

வவுனியாவில் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் கொவிட்- 19 நோய் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில் இம் மாவட்டத்தில் கொவிட் மரணங்களும் சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். வவுனியா மாவட்ட மக்கள் கொவிட் நோயின் பாரதூரத்தை கருத்தில் கொள்ளாமல் அவர்களின் தொடர்ச்சியான அசமந்த போக்கு காரணமாக கொவிட் நோய்த் தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் கொவிட் தொற்றினால் இம் மாதம் 11ஆம் திகதிவரை வவுனியா மாவட்டத்தில் 63 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
செப். 12 11:04

மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால்

(மன்னார், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து வீ.டி.லக்ஸ்மன் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், தற்போதும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராகவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பதவி வகிக்கின்றார். ஆளுநர் பதவியை ஏற்பதற்காக இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
செப். 10 13:55

இலங்கை செல்ல முற்பட்ட பெண் கைது

(மன்னார், ஈழம்) இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்ட இளம் யுவதியொருவர் கடலோரப் பொலிஸாரினால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இந்தியப் பெண்ணொருவர் உட்பட மேலும் நால்வரைக் கைது செய்துள்ளதாக இராமேஸ்வரம் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.
செப். 09 19:56

றிஸாத் பதீயூதீன் சிறைச்சாலை விதிகளை மீறினார்

(மன்னார், ஈழம்) உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் மலையகம் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் றிஸாத் பதீயூதீன் சிறைச்சாலை விதி முறைகளுக்கு முரணாகப் பல செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் இதனால் சிறை அதிகாரிகளுக்குப் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் தெரிவித்தன.
செப். 06 21:36

அவசரகாலச் சட்டம் அமுல்- பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

(மன்னார், ஈழம்) கொவிட் நோய்த் தொற்றைத் தடுத்தல் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல் என்ற போர்வையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமுல்படுத்தப்படட அவசரகாலச் சட்டம் இன்று திங்கட்கிழமை இலங்கைப் பாராளுமன்றத்தில் 81 மேலதிக வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் பெறப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார். இன்று காலை பத்து மணி முதல் மாலை வரை விவாதம் இடம்பெற்றது.
செப். 05 22:53

கொழும்புத் துறைமுகத்துக்குச் சொந்தமான பதின்மூன்று ஏக்கர் நிலப்பகுதி சீன நிறுவனத்திடம் கையளிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பில் உள்ள கொழும்புத் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான பதின்மூன்று ஏக்கர் நிலப்பகுதியை சீன அரசின் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சம்மதத்துடன் கொழும்புத் துறைமுக அதிகாரிகள் காணியைக் கையளிப்பதற்கான எற்பாடுகளை செய்துள்ளதாக அனைத்துத் துறைமுகங்களின் பொது ஊழியர் சங்கச் செயலாளர் நிரோஷன் கொரகானகே தெரிவித்தார். காணியைக் கையளிப்பது தொடர்பாக கொழும்புத் துறைமுக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளோடு உரையாடவில்லை எனவும் அவர்களின் சம்மதம் பெறப்படவில்லையெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
செப். 04 22:37

சந்தேக நபர்களை விசாரணை செய்ய விசேட நீதிபதிகள் குழு

(மன்னார், ஈழம்) இலங்கையில் 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதானவர்களில் 26 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கினை ட்ரயல் அட் பார் முறையில் விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட விஷேட குழுவொன்றை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய கடந்த மாதம் நியமனம் செய்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமே உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரதம நீதியரசரினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செப். 03 22:32

மன்னாரில் கொவிட் தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கொவிட்- 19 நோய்த் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால் மன்னார் நகரில் முப்பது மில்லியன் ரூபா செலவில் புதிய மின் மயானம் ஒன்றினை அமைப்பதற்கும், அதற்கு தேவையான புதிய வாகனமொன்றினைக் கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்டத்தில் அதி தீவிரமாகக் கொரோனா நோய்த் தொற்றுப் பரவிவரும் நிலையில் குறித்த நோய்த் தொற்றினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட மன்னார் பொது வைத்தியசாலையில் ஒரே நாளில் நால்வர் மரணமடைந்திருந்தனர்.
செப். 02 22:44

அவசரகாலச் சட்டம்- பாராளுமன்றத்தில் விவாதம்

(வவுனியா, ஈழம்) அவசரகாலச் சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக இன்று வியாழக்கிழமை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போது அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி அமுல்படுத்தியமை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன. இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் விவாதத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்.