நிரல்
செப். 27 22:31

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படாது

(மன்னார், ஈழம்) தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாதென கொவிட் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் மாகாணங்களுக்குகிடையிலான போக்குவரத்துத் தடை உத்தரவுகள் நீக்கப்படாதெனவும் அவர் கூறினார். ஒக்டோபர் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுததல், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை குறைக்கப்படுமெனவும் சவேந்திர சில்வா கூறினார்.
செப். 26 10:05

ஐந்து மாவட்டங்களிலும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு

(வவுனியா, ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் என்றுமில்லாதவாறு உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேற்படி ஐந்து மாவட்டங்களில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் பால் மா வகைகள் உட்பட அத்தியாவசிய பண்டங்கள் பலவற்றை விலையேற்றத்தை கருத்தில்கொண்டு பதுக்கிவைத்துள்ள நிலையில் பொதுமக்கள் குறித்த பொருட்களை பெறமுடியாது திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செப். 25 20:21

மன்னாரில் திலீபனின் நினைவேந்தல்- பொலிஸாரின் தடையுத்தரவுக்கு நீதிமன்றம் மறுப்பு

இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் திலீபனின் நினைவு நாளான எதிர்வரும் 26 ஆம் திகதியன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனு தொடர்பில் எவ்வித தடை உத்தரவும் பிறப்பிக்காது பொலிஸாரின் கோரிக்கையை மன்னார் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திலீபனின் நினைவு தினம் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும் குறித்த நினைவு நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட நீதிமன்றில் இன்று 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வழக்கொன்றை தாக்கல் செய்தனர்
செப். 24 22:34

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை கருத்தொன்றிக்கச் செய்யும் முயற்சி

(வவுனியா, ஈழம்) வடக்கு-கிழகுத் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தில், தொகுதி ரீதியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை முன்னெடுக்கச் செய்யும் நோக்கில் பொது வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி. வண. கலாநிதி கி. நோயெல் இம்மானுவேல், தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் இந்தப் புதிய முயற்சி ஆரம்பித்து வைக்கப்படுவதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரைச் சேர்ந்த அ. அன்ரனி றொமோள்சன் எனும் சட்டத்தரணியிடம் இந்தப் பொறுப்பைக் கையளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 24 22:09

கோயில் மோட்டை விவகாரம்- குழப்பத்தை உருவாக்கும் தேரர்

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டதின் மடுப்பகுதியில் உள்ள கோயில் மோட்டை எனும் விவசாய காணிகளை மாகாண ஆளுநரின் உத்தரவில் அப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மாகாணக் காணி நிர்வாகத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த 22ஆம் திகதி புதனன்று திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு குறித்த கோயில் மோட்டை விவசாயக் காணியை பார்வையிட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப். 23 23:32

கொவிட் நோய்த் தாக்கம் குறைவடைவதாக சுகாதார அமைச்சு கூறுகிறது

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவில் கொவிட் நோய்த் தாக்கம் குறைவடைந்து வருவதாக இலங்கைச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது என்றும் ஆனாலும் மக்கள் தொடர்ச்சியாகச் சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டுமெனவும் சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
செப். 22 18:30

மாந்தை மேற்கில் சிறுவன் மரணம்- சந்தேகநபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கள்ளியடியில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 22 வயதிற்கு உட்பட்ட நால்வர் மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கள்ளியடி கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுவனின் மர்ம மரணம் தொடர்பாக இறந்த சிறுவனின் தாயார் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய கள்ளியடி கிராமத்தைச் சேர்ந்த 16, 17 , 18 மற்றும் 20 வயதுடைய நால்வரை கடந்த சனிக்கிழமை மாலை இலுப்பைக்கடவை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
செப். 21 23:07

கம்பகா மின்நிலையத்தின் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் இணக்கம்

(மன்னார், ஈழம்) கொழும்பின் எல்லை மாவட்டமான கம்பகா மாவட்டத்தில் உள்ள கெரவலப்பிட்டிய பிரதேசத்தின் ஒரு பகுதியை எரிபொருள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமைக்குக் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றுள்ளவேளையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
செப். 20 22:55

நீதி நிறுவனங்களின் பணிகளை வெளியகப் பொறிமுறையால் மாற்றவோ கையகப்படுத்தவோ இடமளிக்க முடியாது- பீரிஸ்

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவில் இருக்கின்ற உள்ளூர் நீதி நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை மேலும் உரிய முறையில் செயற்படுத்தப் போதிய நடைமுறைகள் இல்லை. ஆனால் அதற்காக இந்த நிறுவனங்கள், அமைப்புகளின் பணிகளை வெளியகப் பொறிமுறைகளினால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ இடமளிக்க முடியாதென வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபை பரிந்துரைத்துள்ள வெளியகப் பொறிமுறையை ஏற்க முடியாதென அமைச்சர் அடித்துக் கூறியுள்ளார்.
செப். 18 19:15

மன்னாரில் தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டைகளைப் பரிசோதிக்க முடிவு

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள வீதிச் சோதனைச் சாவடிகள் ஊடாக பயணிக்கும் பொது மக்கள் தமது கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டைகளைப் படையினர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிடும் வகையில் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் எனும் புதிய நடைமுறை கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் மன்னாரில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 30 தொடக்கம் 60 வயதுடைய பெருமளவானோர் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.