செய்தி: நிரல்
ஒக். 12 21:08

அருவி ஆற்றுக் கரையோர மணல் அகழ்வுக்கு எதிராக மனு

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள பரிகாரிகண்டல் கிராமசேவையாளர் பகுதியில் அருவி ஆற்றுக் கரையோரமாக நீண்ட காலமாக நடைபெற்று வரும் முறையற்ற மணல் அகழ்வினால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்து அதற்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று 12ஆம் திகதி செவ்வாய்கிழமை வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒக். 11 23:06

தனக்கென ஒரு காணித்துண்டு இல்லாமல் வாழ்ந்தவர் அந்தோணி மார்க்

(மன்னார், ஈழம்) காணி உத்தியோகத்தராகவும், உதவி காணி ஆணையாளராகவும் சுமார் முப்பத்து மூன்று வருடங்கள் அரச சேவையில் தொடர்ச்சியாகப் பணியாற்றி, மக்களுக்கு பெரும் சேவையாற்றிய பேதிறு அந்தோணி மார்க் தனது 78வது வயதில் மரணிக்கும் வரை, குடியிருப்பதற்குத் தனக்கென ஒரு காணித்துண்டு இல்லாமல் மன்னார் நகரின் பல இடங்களிலும் வாடகை வீடுகளிலேயே வசித்த நல் மனம் படைத்த மனிதரென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் தெரிவித்தார்.
ஒக். 11 22:44

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்திய வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்தவில்லை- அமைச்சர் பீரிஸ்

(வவுனியா, ஈழம்) 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென இந்திய வெளியுறவுச் செயலாளர் கஸ்வர்த்தன ஸ்ரிங்கா இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருகின்ற அதிகாரம் இந்தியாவுக்குக் கிடையாதெனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
ஒக். 10 21:46

உரத்துக்குத் தட்டுப்பாடு- விவசாயிகள் கவலை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இவ்வருட காலபோக நெற்செய்கைக்கான விதைப்பு வேலைகளை ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமது விவசாய நிலங்களில் காலபோகத்திற்கான உழவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வருட பெரும்போக நெற்செய்கைகளில் ஈடுபடும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், இலங்கையில் தற்போது நிலவும் பாரிய உரத் தட்டுப்பாடுகளுக்கு விரைவில் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என வட மாகாண விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
ஒக். 10 21:26

தமிழ் அரசியல் கைதி 12 ஆண்டுகளின் பின்னர் நிரபராதியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை இராணுவத்தினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுச் சுமார் 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அம்பாறை அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த 29 வயதான கதிரவேலு கபிலன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.