நிரல்
ஜன. 13 22:42

ஆவணத்தைப் பெற முன்னர் இலங்கைக்கான நிதியுதவியை உறுதிப்படுத்தியது இந்தியா

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் சென்ற வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வியாழக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நேரில் சந்தித்து உறுதிப்படுத்தினார். மோடிக்குக் கடிதம் அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட அன்றைய நாளே தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
ஜன. 12 16:54

வடமாகாணத்தில் இந்திய மீனவர்கள் 2009 இற்கு முன்னர் அத்துமீறியதில்லை

(முல்லைத்தீவு) தமிழர் தாயகமான வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் இந்தியா மீனவர்களின் இழுவைப் படகு ஒன்றேனும் அத்துமீறி நுழைந்ததில்லை. இந்தநிலையில் அக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி சுதந்திரமாக தமது கடற்றொழிலை மேற்கொண்டு பொருளாதார ரீதியில் மிகவும் உயர்வான நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்ந்ததாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஜன. 11 22:04

பதவி கவிழ்க்கவுள்ளதாக மைத்திரி- சஜித் சூழுரை

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பிரதான கட்சிகளும் கூடிச் செயற்படுவது தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வர மறுக்கின்றன. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை முன்வைக்கின்றன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு முரண்பட்டு வரும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் ஆட்சி அமைக்குமென அதன் தலைவா் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் எந்தக் கட்சியோடு இணைந்து ஆட்சியமைக்கப்படும் என்று அவா் கூறவில்லை.
ஜன. 10 22:56

புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக மைத்திரி கூறுகிறார்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் விரைவில் அரசாங்கம் அமைக்கப்படுமென கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இந்த அரசாங்கம் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது என்றும் ஏனைய சில கட்சிகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க உரையாடி வருவதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார். ஆனால் மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சக்தி இல்லையென அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜன. 09 07:30

பிளவுபட்டுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளை இணைந்து கையாளும் வெளிச் சக்திகள்

(முல்லைத்தீவு) பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் பின்னால் இலங்கையின் திட்டமிடலும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் தமிழர்கள் 13 ஐ மாத்திரம் கேட்டால் போதும் என்ற மன நிலை இலங்கையிடம் உண்டு. இதற்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறுபட்ட தமிழ்த்தரப்புகளைக் கையாண்டு எடுக்கப்பட்டிருந்த பல முயற்சிகள் தோல்வி கண்டதன் பின்னணியில், புதிய முயற்சியின் மூலம் இலங்கை ஒற்றையாட்சியை நிலை நிறுத்தக்கூடிய இந்த அணுகுமுறையைச் செயற்படுத்தியிருக்க வாய்பில்லாமில்லை. தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடாமல் தமிழ்த்தேசியக் கட்சிகள் மாத்திரம் கைச்சாத்திட்டுள்ளமையும், குறித்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற வேண்டுமென்ற அவசரத்தையும் காண்பித்திருக்கிறது.
ஜன. 07 07:59

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு உத்தரவு

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்ட கடற்பரப்பில் கடற்படையினரால் கடந்த 19ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை மன்னார் நீதவான் பி. சிவக்குமார் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஞாயிறு பகல் தலைமன்னார் கடற்பரப்பில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து அங்கு மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப்படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இந்திய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் கைதான இந்திய மீனவர்கள் தாழ்வுபாடு கடற்படையினர் மூலமாக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
ஜன. 06 22:32

பொது ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் கைச்சாத்திட்டவேளை, திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பு

(முல்லைத்தீவு) மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் இன்று வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ளன. அதேநேரம், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தமும் இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெயக் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே இந்திய நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜன. 05 08:21

வடக்குக் கிழக்கில் தமிழ்- முஸ்லிம் உறவில் சாணக்கியத்தை இழந்த சாணக்கியர்கள்

(முல்லைத்தீவு) வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்த்தேசியம் என்பதற்கும், தமிழ்-பேசும் மக்களிடையே அகில இலங்கை ரீதியில் இருக்கவேண்டிய குறைந்தபட்சப் புரிந்துணர்வு என்பதற்குமிடையில், ஒன்றை ஒன்று குழப்பாத வகையில் உருவாக்கப்பட வேண்டிய அரசியல் புரிந்துணர்வு, எவ்வாறு இருக்கவேண்டும் என்ற விளக்கங்கள் எதிர்வரும் காலங்களில் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வடக்குக் கிழக்கு மாகாணத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த விடயம் தொடர்பான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
ஜன. 04 22:01

கோட்டாபயவினால் அமைச்சர் ஒருவர் பதவி நீக்கப்பட மற்றுமொரு அமைச்சர் வரவேற்கிறார்

(வவுனியா, ஈழம்) இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம ஜயந்த பதவி நீக்கப்பட்ட பின்னர். அமைச்சரவையில் உள்ள ஏனைய மூத்த அமைச்சர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அந்த அதிருப்தியை இன்று செவ்வாய்க்கிழமை தனது கல்வி அமைச்சில் வைத்து செய்தியாளர்கள் முன்னிவையில் வெளிப்படுத்தினார். கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு முன்னாள் இராஜாங்க அமைச்சராகப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இன்று பதவி விலக்கப்பட்டமை தொடர்பாகச் செய்தியாளர்கள் சிலர் கேள்வி தொடுத்தபோது பதிலளிக்க மறுத்த தினேஸ் குணவர்த்தன, ஆவேசமாகக் காணப்பட்டார்.
ஜன. 03 11:33

மன்னாரில் கொவிட் நோயாளி மரணம்

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடத்தின் முதலாவது கொவிட் - 19 மரணம் புத்தாண்டின் முதல் நாளான சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இவ்விதம் கொவிட் நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர் 70 வயதுடைய வயோதிபர் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மரணமடைந்த மேற்படி வயோதிபர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இவருக்கு ஏற்பட்ட சுகயீனம் கடந்த 30ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டவேளையில், மேற்கொள்ளப்பட்ட பீ. சி. ஆர். பரிசோதனையின் போது இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை தெரிய வந்ததாகவும் அதிகாரி கூர்மை செய்தி தளத்திற்கு தெரிவித்தார்.