செய்தி: நிரல்
ஜன. 14 13:50

மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படலாம்- சுதந்திரக் கட்சி கூறுகின்றது

(வவுனியா, ஈழம்) கோட்டாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்துக்குள் முரண்பட்டுள்ளதால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தமது கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவைக் காரணமின்றிக் கைது செய்ய முடியாதென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் பகிரங்கமாக முன்வைத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அரசாங்கத்தையும் விமர்சித்து வருவதால், மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு இரகசியமாகத் திட்டமிடப்படுவதாக தயாசிறி ஜயசேகர கூறினார்.
ஜன. 12 16:54

வடமாகாணத்தில் இந்திய மீனவர்கள் 2009 இற்கு முன்னர் அத்துமீறியதில்லை

(முல்லைத்தீவு) தமிழர் தாயகமான வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் இந்தியா மீனவர்களின் இழுவைப் படகு ஒன்றேனும் அத்துமீறி நுழைந்ததில்லை. இந்தநிலையில் அக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி சுதந்திரமாக தமது கடற்றொழிலை மேற்கொண்டு பொருளாதார ரீதியில் மிகவும் உயர்வான நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்ந்ததாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஜன. 11 22:04

பதவி கவிழ்க்கவுள்ளதாக மைத்திரி- சஜித் சூழுரை

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பிரதான கட்சிகளும் கூடிச் செயற்படுவது தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வர மறுக்கின்றன. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை முன்வைக்கின்றன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு முரண்பட்டு வரும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் ஆட்சி அமைக்குமென அதன் தலைவா் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் எந்தக் கட்சியோடு இணைந்து ஆட்சியமைக்கப்படும் என்று அவா் கூறவில்லை.
ஜன. 10 22:56

புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக மைத்திரி கூறுகிறார்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் விரைவில் அரசாங்கம் அமைக்கப்படுமென கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இந்த அரசாங்கம் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது என்றும் ஏனைய சில கட்சிகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க உரையாடி வருவதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார். ஆனால் மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சக்தி இல்லையென அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜன. 07 07:59

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு உத்தரவு

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்ட கடற்பரப்பில் கடற்படையினரால் கடந்த 19ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை மன்னார் நீதவான் பி. சிவக்குமார் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஞாயிறு பகல் தலைமன்னார் கடற்பரப்பில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து அங்கு மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப்படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இந்திய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் கைதான இந்திய மீனவர்கள் தாழ்வுபாடு கடற்படையினர் மூலமாக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
ஜன. 04 22:01

கோட்டாபயவினால் அமைச்சர் ஒருவர் பதவி நீக்கப்பட மற்றுமொரு அமைச்சர் வரவேற்கிறார்

(வவுனியா, ஈழம்) இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம ஜயந்த பதவி நீக்கப்பட்ட பின்னர். அமைச்சரவையில் உள்ள ஏனைய மூத்த அமைச்சர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அந்த அதிருப்தியை இன்று செவ்வாய்க்கிழமை தனது கல்வி அமைச்சில் வைத்து செய்தியாளர்கள் முன்னிவையில் வெளிப்படுத்தினார். கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு முன்னாள் இராஜாங்க அமைச்சராகப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இன்று பதவி விலக்கப்பட்டமை தொடர்பாகச் செய்தியாளர்கள் சிலர் கேள்வி தொடுத்தபோது பதிலளிக்க மறுத்த தினேஸ் குணவர்த்தன, ஆவேசமாகக் காணப்பட்டார்.
ஜன. 03 11:33

மன்னாரில் கொவிட் நோயாளி மரணம்

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடத்தின் முதலாவது கொவிட் - 19 மரணம் புத்தாண்டின் முதல் நாளான சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இவ்விதம் கொவிட் நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர் 70 வயதுடைய வயோதிபர் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மரணமடைந்த மேற்படி வயோதிபர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இவருக்கு ஏற்பட்ட சுகயீனம் கடந்த 30ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டவேளையில், மேற்கொள்ளப்பட்ட பீ. சி. ஆர். பரிசோதனையின் போது இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை தெரிய வந்ததாகவும் அதிகாரி கூர்மை செய்தி தளத்திற்கு தெரிவித்தார்.
ஜன. 01 22:39

தேசியத்தை மட்டுமல்ல சுயநிர்ணய உரிமையையும் கைவிட்ட கடிதம்

(வவுனியா, ஈழம்) இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தை வலியுறுத்தி கடிதம் எழுதுமாறு கோரிய ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற கட்சியின் முன்னெடுப்பில் ஒன்றுகூட்டப்பட்டு இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக 2022 ஜனவரி முதலாம் திகதி இறுதிசெய்திருந்த கடித வரைபில் தமிழரசுக்கட்சியில் தமிழ்த்தேசியம் சார்ந்த பலருக்கு உடன்பாடு இல்லை என்று தெரியவருகிறது. இது தொடர்பாக நீண்டநேரம் புதுவருடநாளன்று விவாதித்த தமிழரசுக்கட்சியினர் தேசியத்தை ஏற்கனவே பெயரளவில் மட்டுமே கொண்டுள்ள தமது கூட்டமைப்பில் தற்போது உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதையும் கைவிட்டுச் செல்வது பொருத்தமில்லை என்று விவாதித்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் கூர்மைக்கு சனிக்கிழமை இரவு தெரிவித்தன.
டிச. 30 22:20

அரசியல் மற்றும் நிதி நெருக்கடி- மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தயாரென அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை ஒருபோதும் மீறவில்லை என்றும் அமைச்சர் பதவிகளில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய விவகாரங்களை பொதுவெளியில் விமர்சிப்பது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு என்று கூறுவதானால், அமைச்சரவையில் இரகசியமான தீர்மானங்களை மேற்கொள்வதும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயல் என்றும் மூன்று அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர்.
டிச. 29 21:43

வடமாகாணத்தில் நான்கு இளைஞர்கள் கொலை

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஞாயிற்றுகிழமை ஆண்கள் நால்வரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியில் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கும் நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 51 வயதுடைய அப்துல் ரசாக் முகம்மது கௌவ்ஸ் எனும் 3 பிள்ளைகளின் தந்தை என மன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். ஞாயிறு முற்பகல் 11.30க்கு மன்னார் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இரண்டு நபர்களால், இவர் வாள்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.