செய்தி: நிரல்
நவ. 24 22:44

ராஜபக்ச நினைவேந்தல் நிகழ்வுக்கு ரணில் பிரதம அதிதி - ஆனால் கோட்டாபய பங்குபற்றவில்லை

(கிளிநொச்சி, ஈழம்) முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் தந்தையாரான ஏ,டி.ராஜபக்சவின் ஐம்பத்து ஐந்தாவது நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் பங்குபற்றியபோதும் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை. வியாழக்கிழமை கொழும்பு நகர மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச பங்குபற்றுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஊடகம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.
நவ. 23 22:08

மற்றுமொரு ஆட்சி மாற்றத்துக்காகப் போராட்டம் நடத்தினால் முப்படைகளையும் பயன்படுத்தி அடக்குவேன்- ரணில்

(வவுனியா, ஈழம்) அடுத்த ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு முயற்சி எடுத்தால், முப்படைகளைப் பயன்படுத்தி அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து அடக்குவேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தும் தொனியில் கூறினார். நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நவ. 22 21:03

வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

(மட்டக்களப்பு, ஈழம்) அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு முப்பத்து ஏழு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்தார். இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்காமல் புறக்கணித்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எதிராக வாக்களித்தது. தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
நவ. 21 07:59

சஜித் - மைத்திரி அணி மற்றும் ஜே.வி.பி எதிர்த்து வாக்களிக்க முடிவு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
நவ. 19 09:38

ரணில் அரசாங்கத்தில் சஜித் அணி உறுப்பினர் ராஜித சேனரட்ன இணைவார்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ராஜித சேனரட்ன. சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்பட்டிருந்தார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படவுள்ளது.
நவ. 18 09:15

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கவே கூடாதென்கிறார் சரத் வீரசேகரா

(வவுனியா, ஈழம்) அரசியல் யாப்புக்கு அமைவாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாதென இலங்கை இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரியும், ராஜபக்ச் குடும்பத்துக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய அமைதிக்காக்கும் படையைத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பித் தோல்வியடைந்ததாலேயே இந்தியா இலங்கையில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது என்றும் அவர் கூறினார். வியாழக்கிழமை இடம்பெற்ற வரவுசெலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.
நவ. 17 10:32

உதவி வழங்கும் நாடுகள் கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக இணக்கம் வெளியிடவில்லை என்கிறாா் அமைச்சா்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடித் தீர்வுக்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் அரச ஊழியர் மட்டத்தில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ள நிலையில், இறுதி ஒப்பந்தம் அரசாங்கத்துடன் செய்யப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் செய்யப்படும் ஒப்பந்தமே அதிகாரபூர்வமானது என்றும் அமைச்சர் கூறினார். அரச ஊழியர்மட்ட ஒப்பந்தத்தில் பல பரிந்துரைகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்தது. அவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயக்கம் காண்பித்து வந்த நிலையில். அரசாங்கம் அதிகாரபூர்வமான ஒப்பந்தத்தைச் செய்யவுள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
நவ. 14 08:25

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி

(வவுனியா, ஈழம்) வரவுசெலவுத் திட்டத்தின் மொத்தத் தொகையில் பத்து வீதம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் இவ்வளவு தொகை எனவும் அவர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குற்றம் சுமத்தியுள்ளது. வடக்குக் கிழக்கில் மீள் குடியேற்றம் மற்றும் உதவிகள் தொடர்பான விடயங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நவ. 11 21:57

மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் தமிழர்களின் காணிகள் மீண்டும் அரசாங்கத்தால் அபகரிப்பு

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பரப்புக்கடந்தான் கிராமத்தில் 630 தமிழ் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் தனிநபர்களினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளில் பெரும் பகுதி இலங்கை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கந்தையா சௌந்தரராசா கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராகப் பணியாற்றிய கே.கணேஷின் பணிப்பின் பேரில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் காணிகள் அற்ற மக்களுக்கு பரப்புக்கடந்தான் பகுதியில் அரச காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
நவ. 10 22:56

பொருளாதாரம் அடுத்த ஆண்டு இறுதியில் மீட்சி பெறுமென இலங்கை மத்திய வங்கி அறிக்கை கூறுகிறது

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கைத்தீவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு இறுதியில் இருந்து குறிப்பிடத்தக்களவு உயர்வடையுமென எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார ஒழுங்குகள் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருட ஆரம்பத்தில் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. ஆனாலும் அந்த நெருக்கடிகள் தற்போது குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.