நிரல்
ஜன. 25 23:41

தமிழர்களையும் சர்வதேச சமூகத்தையும் ரணில் ஏமாற்றுகிறாராம்- பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு தமிழ் சமூகத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் தமது கட்சி கலந்துகொள்ளாது என்றும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோதே 2017 ஆம் ஆண்டுதான் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ரணில் பேசுகிறார். தமிழரசுக் கட்சி கடந்த மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் சமஸ்டித் தீர்வு பற்றிப் பேசவில்லை. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டமும் தீர்வு அல்ல என்று கூறுகின்றனர்.
ஜன. 23 22:27

ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றிப் புதியவர்களை நியமிக்க அரசாங்கம் முயற்சி- பீரிஸ் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் கடந்த இரண்டரை மாதங்களில் ஏழு தடவைகள் முயற்சி மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றிப் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் முற்படுவதாகவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற முடியாதெனவும் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பீரிஸ், அது அரசியல் யாப்புக்கு முரணானது என்றும் கூறினார்.
ஜன. 21 10:39

டில்லி கொழும்பைக் கையாளுகின்றதா, கொழும்பு டில்லியை ஏமாற்றுகின்றதா?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே தொடர்ச்சியாகக் காணப்படும் முரண்பாடுகள், பிரிந்து நின்று அமெரிக்க இந்திய அரசுகளின் தந்திரோபாயங்களுக்கு உட்படுதல், மற்றும் கொழும்பில் சிங்கள ஆட்சியாளர்களுடனான தனிப்பட்ட உறவுகள் போன்ற நேர்மையற்ற அரசியல் செயற்பாடுகளை இந்திய - இலங்கை அரசுகள் கன கச்சிதமாகக் கையாண்டு வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கொழும்புப் பயணம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டுடன் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் புதுடில்லியில் பதவி வகிக்கும் மிலிந்த மொறகொட அதற்குரிய அரசியல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பதின்மூன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜெய்சங்கர் பரிந்துரைத்திருப்பது வேடிக்கை.
ஜன. 19 21:20

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல்

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு உட்பட இலங்கைத்தீவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேர்தலைக் கண்காணிக்கும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி றோகன ஹெட்டியாராட்சி தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அவர், உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம முறையிட்டுள்ளதாகவும் கூறினார்.அச்சறுத்தல்களுக்கு உள்ளான அதிகாரிகளுக்கப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுதந்திரமாகத் தேர்தல் கடமைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் றோகன ஹெட்டியாராட்சி வேண்டுகோள் விடுத்துளார்.
ஜன. 18 09:16

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கைத்தீவில் உள்ள முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறும். சென்ற நான்காம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் எல்லிபிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுத் தாக்கல் இடம்பெறுகின்றன.
ஜன. 16 10:13

இலங்கையுடன் இந்தியா திருகோணமலை அபிவிருத்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஏற்பாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். இரண்டு நாள் பயணத்தில் இலங்கையுடன் இரண்டு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமெனக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமைச்சர் ஜெய்சங்கரின் வருகை உறுதிப்படுதியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தப் பணயம் இரு நாடுகளிடையேயான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனக் கூறியுள்ளது.
ஜன. 14 21:07

சர்வதேச நீதியை முற்றாக மறுதலிக்கப்போகும் கனடாவின் தடை

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல காரியங்கள் - கடமைகள் சர்வதேச சமூகத்துக்கு இருக்கும் நிலையில், அவசர அவசரமாகக் குறுக்குவழியில் ராஜபக்ச குடும்பத்தை மாத்திரம் தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, இலங்கைக்கு ஆறுதலான சமிக்ஞையைக் கொடுத்திருக்கிறது கனடா. இறுதிப் போரில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படுவதையும் பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படுவதையும் ஐக்கிய நாடுகள் சபை தடுக்கத் தவறியது. வன்னியில் இருந்து ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுச் சாட்சியம் இன்றி நடந்த போர் என்று சம்பந்தன் 2010 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் வர்ணித்திருந்தார்.
ஜன. 13 21:59

சுதந்திர தின நிகழ்வுக்கு இருபது கோடி செலவு- ரணில் உரை ரத்து

(வவுனியா, ஈழம்) இலங்கையின் ஐம்பத்து ஐந்தாவது சுதந்திரதினக் கொண்டாட்டத்திற்கு இருபது கோடி ரூபா செலவாகுமென உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். சுமார் ஐம்பத்து ஏழு கோடி ரூபா செலவாகுமென மதிப்பிட்டதாகவும், ஆனால் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், செலவுகளைக் குறைத்துக்கொள்ள அரசாங்கம் ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அசோக பிரியந்த இவ்வாறு கூறினார்.
ஜன. 11 09:47

மைத்திரி, விமல், டளஸ் புதிய கூட்டணி

(வவுனியா, ஈழம்) விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுர பிரியதர்சன யாப்பா அணி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு இந்த அரசியல் கூட்டணி புதன்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணிக்கான அங்குராட்பன நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தப் புதிய கூட்டணி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 09 08:30

மிலிந்த மொறகொடவும் புதுடில்லியும்

தமிழ் நாட்டுக்கு ஊடாக இந்தியாவை ஈழத்தமிழர்கள் ஒருபோதும் அணுகக்கூடாது. புதுடில்லியுடன் நேரடியாகத் தமது அணுகுமுறையை ஈழத்தமிழர்கள் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு. குறிப்பாகச் சோனியாவை மையப்படுத்திய காங்கிரஸ், மோடியை மையப்படுத்திய இந்துத்துவவாத பி.ஜே.பி ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் தரப்பினருக்குத் தொடர்ந்து வலியுறுத்துகின்ற விடயம் இதுதான். மோடியின் காலத்தில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களில் ஒருபகுதியினர் இந்துத்துவவாத சக்திகளின் வலைக்குள் வீழ்த்தப்பட்டு வருகிறார்கள் என்பது தற்போது பகிரங்கமாகி வருகின்றது.