செய்தி: நிரல்
ஜன. 23 22:27

ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றிப் புதியவர்களை நியமிக்க அரசாங்கம் முயற்சி- பீரிஸ் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் கடந்த இரண்டரை மாதங்களில் ஏழு தடவைகள் முயற்சி மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றிப் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் முற்படுவதாகவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற முடியாதெனவும் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பீரிஸ், அது அரசியல் யாப்புக்கு முரணானது என்றும் கூறினார்.
ஜன. 19 21:20

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல்

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு உட்பட இலங்கைத்தீவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேர்தலைக் கண்காணிக்கும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி றோகன ஹெட்டியாராட்சி தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அவர், உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம முறையிட்டுள்ளதாகவும் கூறினார்.அச்சறுத்தல்களுக்கு உள்ளான அதிகாரிகளுக்கப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுதந்திரமாகத் தேர்தல் கடமைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் றோகன ஹெட்டியாராட்சி வேண்டுகோள் விடுத்துளார்.
ஜன. 18 09:16

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கைத்தீவில் உள்ள முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறும். சென்ற நான்காம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் எல்லிபிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுத் தாக்கல் இடம்பெறுகின்றன.
ஜன. 16 10:13

இலங்கையுடன் இந்தியா திருகோணமலை அபிவிருத்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஏற்பாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். இரண்டு நாள் பயணத்தில் இலங்கையுடன் இரண்டு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமெனக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமைச்சர் ஜெய்சங்கரின் வருகை உறுதிப்படுதியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தப் பணயம் இரு நாடுகளிடையேயான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனக் கூறியுள்ளது.
ஜன. 13 21:59

சுதந்திர தின நிகழ்வுக்கு இருபது கோடி செலவு- ரணில் உரை ரத்து

(வவுனியா, ஈழம்) இலங்கையின் ஐம்பத்து ஐந்தாவது சுதந்திரதினக் கொண்டாட்டத்திற்கு இருபது கோடி ரூபா செலவாகுமென உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். சுமார் ஐம்பத்து ஏழு கோடி ரூபா செலவாகுமென மதிப்பிட்டதாகவும், ஆனால் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், செலவுகளைக் குறைத்துக்கொள்ள அரசாங்கம் ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அசோக பிரியந்த இவ்வாறு கூறினார்.