நிரல்
மே 15 21:49

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணை - மகிந்த மௌனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகள் நடத்தவில்லையென எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை கொழும்பில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, விசாரணை சரியான முறையில் நடத்தப்படாமையினால் எதிர்க்கட்சி என்ற முறையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனவும் கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச எதுவுமே கூறவில்லை.
மே 15 11:25

கைதுசெய்யப்பட்டுள்ள சக மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் மற்றும் மருத்துபீட சிற்றுண்டிச்சாலை ஊழியர் ஆகிய மூவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மே 14 21:49

இலங்கையின் தேசிய பாதுகாப்பு - சீனா உத்தரவாதம், ஒப்பந்தம் கைச்சாத்து

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான சூழலில் பயங்கரவாதத் தாக்குதல்களை இல்லாதொழித்து இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இலங்கை முப்படையினரின் வினைத்திறனை ஊக்குவிப்பதற்காக 260 கோடி ரூபாய்களை வழங்கவும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இணக்கம் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இவ்வாறு உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 14 10:56

ரஷியாவிடம் இலங்கை ஆலோசனை - அமைச்சர் ஒலேக், தூதுவர் தயான் சந்திப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து இஸ்லாமியவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இந்தியாவும் உதவியளித்து வரும் நிலையில், ரஷிய அரசுடனும் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலமை குறித்து ரஷியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ் - இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பில் ரஷியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ், ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மே 14 07:07

வடக்கில் 8 இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்று ஆறு சதுர கிலோமீற்றர் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றல்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்னிவெடிகளை அகற்கும் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதற்கமைய 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை சர்வதேச மற்றும் உள்ளுர் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான சார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 8 இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்று ஆறு சதுர கிலோமீற்றர் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 13 23:01

முஸ்லிம் கிராமங்களில் 24 மணிநேரத் தாக்குதல் - சிங்கள இளைஞர்கள் கைவரிசை

(வவுனியா, ஈழம் ) ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்திய தற்கொலைத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வட மேல் மாகாணம் குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாபிட்டி, நிக்கவரட்டிய ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் கிராமங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று திங்கட்கிழமை மாலை வரை இடம்பெற்ற தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இரண்டு பிரதேசங்களையும் மையப்படுத்திய சுமார் முப்பது முஸ்லிம் கிராமங்களில் இன்றிரவு 7 மணிவரை சுமார் 24 மணிநேர தாக்குதல் சிங்கள இளைஞர் குழுக்களினால் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதே கூடுதலான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மே 13 15:21

அமெரிக்கப் போர்க் கப்பல் கொழும்பில் - இலங்கைக் கடலில் பணிகள் ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) அமெரிக்க அரசினால் சென்ற ஆண்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட யுஎஸ்சிஜிசி ஷேர்மன் (USCGC Sherman) என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. இந்தக் கப்பலோடு இலங்கைக் கடற்படையின் இருபத்தியிரண்டு உயரதிகாரிகளும் இரண்டாம் நிலை அதிகாரிகள் நூற்றிப் பதினொரு பேரும் வருகை தந்துள்ளனர். கப்டன் றோகித அபேசிங்கவின் தலைமையில் யுஎஸ்சிஜிசி ஷேர்மன் என்ற போர்க் கப்பலை ஆழ்கடலில் கையாள்வதற்கான பயிற்சிகளையும் அமெரிக்காவில் முடித்துக் கொண்டே இவர்கள் அனைவரும் அந்தக் கப்பலுடன் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர். இலங்கைக் கடற்படை அதிகாரிகள் இவர்களை வரவேற்றனர். விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக் கடற்படையிடம் இந்தக் கப்பலைக் கையளிப்பார்.
மே 13 14:22

வடமேல் மாகாணத்தில் காலவரையறையற்ற ஊரடங்கு

(வவுனியா, ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலையடுத்து குறிப்பிட்ட சில பிரதேசங்களில் தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவுகின்றது. இன்று திங்கட்கிழமை மாலை ஐந்து மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிலாபம், புத்தளம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகணத்தில் காலவரையறையற்ற ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருநாகல் - குளியாப்பிட்டியா, பின்கிரியா, டும்மலசூரியா, ஹெட்டிபொல, ரஸ்நாயக்கபுர, கொபேகன போன்ற பிரதேசங்களில் மாத்திரமே இன்று பிற்பகல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் திடீரெனப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நகரில் வன்முறைகள் ஆரம்பித்ததால் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.
மே 12 23:00

சிலாபத்தில் சிங்கள, முஸ்லிம் மோதல் - கட்டுப்பாட்டில் என்கிறது இலங்கைப் பொலிஸ்

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் வடமேல் மாகாணம் சிலாபம் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிங்கள முஸ்லிம் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். முகநூலில் வெளியான பதிவு ஒன்றைத் தவறாகப் புரிந்து கொண்ட சிங்கள இளைஞர்கள் சிலர் சிலாபம் நகரில் உள்ள வர்த்தகர் ஒருவருடன் தர்க்கம் புரிந்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு இலங்கைப் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இலங்கை முப்படையினரும் சிலாபம் நகரில் குவிக்கப்பட்டனர். பிற்பகலில் இருந்து நாளை திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணி வரையும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மே 12 15:13

அமெரிக்காவில் திலக்மாரப்பன உரையாடல்- சீனா செல்கிறார் மைத்திரி

(யாழ்ப்பாணம், ஈழம் ) உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பையடுத்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அமெரிக்காவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை சீனாவுக்குச் செல்லவுள்ளார். ஆசிய நாகரீகங்களின் உரையாடல் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை பீஜிங்கில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் உரையாற்றுவதற்காகவே மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குச் செல்கிறார். 47 ஆசிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், பிரமுகர்கள் உட்பட இருநூறுபேர் மாநாட்டில் கலந்துரையாடவுள்ளனர். அதேவேளை, மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை சீன அதிபர் ஷி ஜின்பிங், சீனப் பிரதமர் லி கெகியாங் ஆகியோரை மைத்திரிபால தனித்தனியாகச் சந்திக்கவுமுள்ளார்