(யாழ்ப்பாணம், ஈழம்)
விடுதலை வேண்டி நிற்கும் தேசிய இனங்களுக்கு ஊடகங்களின், குறிப்பாக பத்திரிகைகளின் பங்களிப்பு முக்கியமானது. செய்திப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் உள்ளக மற்றும் உலக விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினாலும் தான் சார்ந்து நிற்கும் கமூகத்தின் உரிமைகளையும் தேசத்துக்கான அங்கீகாரத்தையும் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும். ஆசிரிய பீடத்தின் கொள்கை அதுவாகவே இருக்கவும் வேண்டும். அந்த அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் வெளியாகிய நமது ஈழநாட்டின் ஆசிரியர் தலையங்கங்கள் முக்கியமாகிறது. 2002- 2003 ஆம் ஆண்டுகளில் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பதவி வகித்திருந்த கலாநிதி எஸ். ரகுராம் எழுதிய ஆசிரியர் தலையங்கங்கள் தொகுக்கப்பட்டு உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம் என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.