கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜூலை 21 22:51

இறைமையைப் பாதுகாக்கும் ரணில்- தமிழ்த்தரப்புச் செய்ய வேண்டியது என்ன?

(வவுனியா, ஈழம்) ஓற்றையாட்சியைப் பாதுகாக்கும் இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் எவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசியல் யாப்பைப் பாதுகாப்பேன் என்று கூறியே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். அரசியல் யாப்பைப் பாதுகாப்பது என்பது பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒற்றையாட்சி முறையைக் குறிக்கும். பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு, பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, முப்படைத் தளபதிகளைச் சந்திக்கிறார் ரணில். பௌத்த விகாரைக்குச் செல்கிறார். இவைதான் ஒற்றையாட்சி அரசியல் யாப்பைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் முதற் கடமை என்பதை ரணில் தனது செயற்பாட்டின் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.
ஜூலை 14 11:55

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் வகையில் தமிழ்த்தேசிய அரசியல் பிரகடனம் மேற்கொள்ளப்பட வேண்டிய தருணம் இது

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோரி தென் இலங்கையில் நடத்தப்பட்ட போராட்டங்களை ஒரு கிளர்ச்சியின் வெளிப்பாடுகளாக மட்டுமே ஈழத்தமிழர்கள் அணுக வேண்டும். அந்தக் கிளர்ச்சியானது ஓர் அரசியல் புரட்சி அல்ல என்ற புரிதல் இங்கு அவசியமாகிறது. புரட்சி என்றால் ஏதேனும் ஒரு கொள்கையோடு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இங்கே கிளர்ச்சியாளர்கள் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்ற காரணங்களை முன் நிறுத்தி கோட்டாபயவுக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர். இக் கிளர்ச்சி கடந்த சனிக்கிழமை ஒன்பதாம் திகதியன்று மேலும் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றுக் கொண்டது. ஆனால், இந்தக் கிளர்ச்சியை இயக்கியவர்களால் ஓர் அரசியல் புரட்சியாக இதனை மாற்ற முடியாமல் போனதை ஈழத்தமிழர்கள் இரண்டு காரணங்கள் ஊடாக நோக்க வேண்டும்.
ஜூலை 11 11:02

அமெரிக்க - இந்திய அரசுகளிடையேயான பனிப்போர் இலங்கை விடயத்தில் தாக்கம் செலுத்தவில்லை

(வவுனியா, ஈழம்) ரசிய- உக்ரெய்ன் போரினால் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கிடையே பனிப்போர் மூண்டுள்ளது என்பது உண்மை. ஆனால் இந்த இரு நாடுகளும் இலங்கை விவகாரத்தில் ஒரே புள்ளியில் நின்றுதான் செயற்படுகின்றன என்பதைக் கூர்மைச் செய்தித் தளம் பல தடவை கூறியிருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கச் சார்புடையவர் என்பதும், இந்தியாவுடனான இலங்கையின் உறவுகூட அமெரிக்காவுக்கும் விருப்பமான நகர்வுதான் என்பதும் வெளிப்படை. சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக முடிவெடுத்தாலும், அடுத்த வரவுள்ள ஜனாதிபதிகூட அமெரிக்க - இந்தியச் சார்புப் போக்கைக் கையாள வேண்டும் என்ற சமிக்ஞைகள் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மூலம் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
ஜூன் 16 00:05

பொருண்மிய நெருக்கடியையும் பயன்படுத்திப் பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கையை முற்றாக விடுவிக்க பீரிஸ் முழு முயற்சி

(கிளிநொச்சி, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்குள், ஈழத்தமிழர் விவகாரத்தை ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையில் இருந்து கனகச்சிதமாக நீக்கிவிடச் செய்யும் முனைப்பில், உண்மைக்கு மாறான திரிபுபடுத்திய தகவல்களை ஐம்பதாவது கூட்டத் தொடரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 13 ஜூன் திங்களன்று உரையாற்றும்போது முன்வைத்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை வகிக்கும் பின்னணியில், சா்வதேச தரப்புகள் தமது வாதங்களை 2002 பேச்சுவார்த்தைக் காலத்தைப்போல நம்பும் என்ற எதிர்பார்ப்போடு அமைச்சர் பீரிஸ் பொறுப்புக்கூறல், சாட்சியப் பொறிமுறை பற்றிய கருத்துகளை கடும் தொனியில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது முன்னரைப் போலன்றி இம்முறை ஈழத்தமிழர்களுக்கு மிக ஆபத்தான வியூகமாகிறது.
ஜூன் 13 22:27

ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் இந்திய எதிர்ப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அமெரிக்க- இந்திய அரசுகள் தமது புவிசார் நலன்களைப் பெறும் திட்டங்களையே செயற்படுத்த முற்படுகின்றன என்பதை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின்போது அறிந்துகொள்ள முடிந்தது. இலங்கைத்தீவில் மின் சக்தி எரிசக்தித் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்திடம் கையளிக்கும் யோசனைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நேரடியாக எதிர்ப்பு வெளியிடவில்லை. ஆனாலும் அதானி நிறுவனம் தொடர்பாக சஜித் பிரேமதாசாவின் கட்சி முன்வைக்கும் விமர்சனம், இந்தியாவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற செய்தியைப் பகிரங்கப்படுத்துகின்றது.
ஜூன் 09 10:59

இந்தியத் தூதரக, புலம்பெயர் உதவியின் மத்தியிலும் யாழ் வைத்தியசாலையின் மருந்துக்கையிருப்பு ஊசலாட்டம்

இலங்கைத் தீவைக் கடுமையாகத் தாக்கியுள்ள பொருண்மிய நெருக்கடிக்குள், குறிப்பாக மருந்துக்கொள்வனவுக்கான அந்நியச் செலாவணித் தட்டுப்பாட்டின் மத்தியில், இந்திய தூதரகத்தின் ஊடான உதவியூடாக ஓரளவு மருந்துவகைகள் கிடைக்கப்பெற்றுள்ளமையோடும், புலம்பெயர்ந்துவாழும் கொடைக்குணமுள்ளோரின் உதவியோடு தீவுக்குள்ளேயே அடிப்படைத் தேவைக்கான கையிருப்புகளைக் கொள்வனவு செய்தும், தனது அடிப்படை மருந்துக் கையிருப்பை யாழ் போதனா வைத்தியசாலை மயிரிழையில் சமாளித்துவருகிறது. மாத அடிப்படையில் அன்றி வாராந்த அடிப்படையில் கையிருப்பை இதுவரை நுட்பமாகக் கையாண்டு வந்த போதிலும் பெருத்த சவாலை வைத்தியசாலை எதிர்கொள்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரை கூர்மை தொடர்பு கொண்டபோது அவர் விரிவாக எடுத்தியம்பினார்.
ஜூன் 08 08:45

கருணைக் கொலை செய்துவிடுமாறு கேட்குமளவுக்குத் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்களின் அவலம்

(வவுனியா, ஈழம்) தமிழ் நாடு திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள சிறப்பு முகாம் எனப்படும் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் பதினேழுபேர் இருபது நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு விசாரணைகள் முடிவடைந்து விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் பலர் தம்மை விடுதலை செய்து உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரியுள்ளனர். சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம் அதிகாரிகள் தம்மைத் துன்புறுத்துவதாகவும், தேவையற்ற முறையில் ஒருவர் மீது பல வழக்குகளைத் தாக்கல் செய்து தொடர்ந்தும் தம்மைத் தடுத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ள இளைஞர்கள், வேதனை தாங்க முடியாததால் தங்களைக் கருணைக் கொலை செய்யுமாறும் கோரியுள்ளனர்.
ஜூன் 05 21:33

ஈழத்தமிழர் தொடர்பான டில்லியின் கொள்கைக்கு உரமூட்டுகிறாரா தமிழக முதல்வர் ஸ்ராலின்?

(வவுனியா, ஈழம்) ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் செயற்பாடுகள் போன்றே ஸ்ராலின் தலைமையிலான தமிழக அரசின் செயற்பாடுகளும் அமைவதுபோல், சமீபகாலச் செயற்பாடுகள் காணப்படுகின்றன. புதுடில்லியில் உள்ள அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இலங்கைக்கான தூதுவர் மிலிந்த மொறகொட சனிக்கிழமை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்ராலினைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள் தொடர்பாகவும், தமிழக அரசு மேலும் வழங்கவுள்ள உதவிகள் குறித்துமே இருவரும் உரையாடியிருக்கின்றனர். அத்துடன் இலங்கைக்கு பயணம் செய்யுமாறு மிலிந்த மொறகொட ஸ்ராலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கொழும்பில் உள்ள நியூஸ்பெஸ்ட் (newsfirst.lk/tamil) என்ற இலத்திரனியல் ஊடகம் கூறுகின்றது.
மே 27 22:53

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சியை முற்றாக நீக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் 21 ஆவது திருத்தச் சட்டத்துக்கான நகல் வரைபு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழிப்பது தொடர்பாக ஆராயக் குழு ஒன்றை அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 21 இற்கான நகல் வரைபு தொடர்பாக ஆராயும் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய கூட்டத்தின் மூலம், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை முற்றாக நீக்கம் செய்யப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதைப் பிரதான சிங்களக் கட்சிகள் முன்வைத்த கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
மே 24 23:14

21 ஆவது திருத்தத்துக்குள் மறைந்திருக்கும் பேராபத்து

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்தில் சில விடயங்களையும் உள்ளடக்கியே 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல்வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நகல்வரைபு, கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பட்டு வெளியேறித் தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றுள்ள சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவினாலேயே தயாரிக்கப்பட்டிருக்கின்றது. விஜயதாச ராஜபக்சவுக்கு நெருக்கமான இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் சில சட்டத்தரணிகளும் நகல் வரைபு தயாரித்த குழுவில் அங்கம் வகித்திருக்கின்றனர். இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்தும் துணிகரம் இந்த நகல் வரைபில் தெரிகிறது.