(கிளிநொச்சி, ஈழம்)
கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோராமல், விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்குச் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எழுதிய கடிதத்தின் பிரகாரம் அனைத்தும் தற்போது நிறைவேற்றப்படுகின்றது போல் தெரிகின்றது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகிப் புதிய ஒருவர் அரசாங்கத்துக்குள்ளேயே தெரிவு செய்யப்படுவாரென முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார். எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய பின்னர் தனது பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைப்பாரென முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.