கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
பெப். 03 22:59

பாக்கிஸ்தான் கடற்பரப்பில் இடம்பெறவுள்ள கூட்டுப் பயிற்சியில் இலங்கைக் கடற்படையும் பங்கேற்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) நாற்பத்து நான்கு நாடுகளின் கடற்படையினர் பங்குபற்றும் அமான் 2019 என்ற பெயரிலான மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி எதிர்வரும் எட்டாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில், இலங்கைக் கடற்படையும் பங்குகொள்ளவுள்ளது. கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சயுரால என்ற இலங்கைக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை பாகிஸ்தான் நோக்கிப் பயணமாகியுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி பாகிஸ்தான் - கராச்சி துறைமுகத்தை அந்தக் கப்பல் சென்றடையும் என இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 28 அதிகாரிகள், 142 மாலுமிகள் உட்பட 170 இலங்கை கடற்படை அதிகாரிகள் சென்றுள்ளனா். இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்குகொள்ளவில்லை.
ஜன. 22 21:34

இலங்கையில் நெருக்கடிக்குள்ளாகி வரும் சிங்கள அரசியல் கட்சிகள் - சந்திரிக்கா புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். தனது தந்தையான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான சந்திரிக்கா அந்தக் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிப்பார் என்றும் அது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தன்னுடன் ஒத்துழைக்கக் கூடிய மூத்த உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவுடன் ஏலவே முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபகாலமாக ஏற்பட்ட முரண்பாடுகள் குழப்பங்களினால் சந்திரிக்கா அதிருப்தியடைந்துள்ளதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
ஜன. 21 09:57

பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிய விக்னேஸ்வரன் தற்போது அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் அவருடைய புதிய கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கிய அனந்தி சசிதரன் இதுவரை ஆதரவு வழங்கவில்லை.
ஜன. 12 15:34

திருகோணமலையில் படைத்தளம் அமைக்க பிரித்தானியா முயற்சி- ஆனால் கொழும்பில் உள்ள தூதரகம் மறுப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு மாகாணம் முல்லைத்தீவுக் கடற் பிரதேசத்தில் இருந்து கிழக்கு மாகாணம் திருகோணமலைக் கடற்பிரதேசம் வரையான எண்ணெய்வள ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, திருகோணமலைத் துறைமுகத்தில் கடற்படைத் தளம் ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கச் சார்பு நாடான பிரித்தானியாவும் திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாக லன்டன் டெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆசியாவில் தளங்களை அமைப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் திருகோணமலையில் கடற்படை தளத்தை அமைப்பது குறித்து பிரித்தானியா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜன. 02 23:38

மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் - நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரி - ரணில் தரப்பு இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக, உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலை இந்த ஆண்டின் முற்பகுதியில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான இரு அரசியல் கட்சிகளும் விரும்பியுள்ளதாகவும் அதற்கேற்ற முறையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
டிச. 20 12:22

ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் தற்போது இரு வகையான ஜனநாயகத்தை உணர்கிறார்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில் இலங்கையில், கடந்த ஐம்பது நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளததாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அறிக்கை வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி உறுப்பினர் சுமந்திரன். சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரின் கடும் முயற்சியினால் இலங்கை உயர் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை அரச வர்த்தமானி இதழுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி மீண்டும் நாடாளுமன்றம் செயற்படுவதற்கு அனுமதியளித்துள்ளது. இது குறித்து பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களே பெருமைப்பட்டுள்ளனர். இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளுக்கும் தமிழரசுக் கட்சியின் இப் பங்களிப்பு நன்கு தெரியும்.
டிச. 03 19:32

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாதென மகிந்த அறிக்கை - சஜித்தைப் பிரதமராக்கும் மைத்திரியின் முயற்சி மீண்டும் தோல்வி

(மன்னார், ஈழம்) பிரதமராக பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவை ஏற்க முடியாதென்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தீர்ப்புக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் மகிந்த கூறியுள்ளார். இடைக்காலத் தீர்ப்புத் தொடர்பாக மகிந்த இன்று திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை குறித்து ரணில் தரப்பு எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மேலும் நீடித்துச் செல்லுகின்றது.
நவ. 29 14:29

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தமிழ்த்தேசியத்தின் சுயமரியாதையை உயிர்ப்போடு வெளிப்படுத்திய மாவீரர் நாள் நிகழ்வுகள்

(மட்டக்களப்பு, ஈழம்) 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் சூழலிலும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமது இறைமை தன்னாதிக்கம் போன்றவற்றுக்கான அங்கீகாரத்துக்குமான ஏக்கங்களோடு ஈழத் தமிழர்கள் கொள்கை மாறாமல் இருக்கின்றனர் என்பதை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் எடுத்துக் கூறியுள்ளனர். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தடைகள், அச்சுறுத்தல்கள் போன்ற துன்பங்களைத் தாண்டி திட்டமிட்டபடி மாவீரர் நாள் நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொண்டனர் அமைப்பு ரீதியான ஒழுங்குபடுத்தல்கள் எதுவுமேயின்றி ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் மக்கள் தாமாகவே முன்சென்று நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர். விடுதலைப் புலிகளின் பாடல்கள் இசைகள் ஒதுவும் ஒலிபரப்பக் கூடாது என யாழ் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
நவ. 28 08:27

ஐ.நா ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் கொழும்பில் - சீனத் தூதுவர் மகிந்த தரப்புடன் சந்திப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமரான பின்னர் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசியல் நெருக்கடி குறித்து பிரதான அரசியல் கட்சிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசி வருகின்றன. ஜனநாயக மீறல் எனவும் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக பிரதான அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும் என்றும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனா். அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடியுமுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து மைத்திரி விளக்கமளித்துமுள்ளார்.
நவ. 26 22:50

அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய ஏழு நீதியரசா்கள் நியமிக்கப்பட்டமை எந்த அடிப்படையில்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான இலங்கை வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை பிரதம நீதியரசர் நளின் பெரேரா வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவாகவே தாக்கல் செய்திருந்தன. ஆனால் அரசியல் நெருக்கடி விவகாரமாகக் கருதி உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வாக விசாரணையை நடத்துமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இடையீட்டு மனு ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.