இந்த நிலையிலேயே சென்ற பத்தொன்பதாம் திகதி அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரல் ஓப் த ப்லீட் (Admiral of the fleet) என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தரமுயர்த்தப்பட்டார்.

இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட 2008/2009 ஆண்டுக் காலப் பகுதியில் கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்களைக் கடத்திக் கப்பம் பெற்றுப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பிரதான குற்றவாளியாகக் கருதப்படுகிறார். இதனால் இலங்கை உயர் நீதிமன்றத்திலும் கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்த நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வசந்த கரன்னகொடவை இலங்கைப் படைத்துறை சேவையில் அட்மிரல் ஓப் த ப்லீட் (Admiral of the fleet) எனத் தரமுயர்த்தியுள்ளார். அவ்வாறு தரமுயர்த்தப்பட்டமைக்கான சான்றிதழை வசந்த கரன்னகொடவுக்கு மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் 19 ஆம் திகதி வழங்கிவைத்தார். இந்தப் பதவி நிலைத் தரமுயர்த்தல் தொடர்பாக இலங்கை அரச வர்த்தமானி இதழும் வெளியாகியிருந்தது.
இதன் பின்னணியிலேயே விசாரணை நடத்துமாறு கொழும்புக் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்தச் சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகளின் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கூறியிருந்தனர்.
குறிப்பாகக் கடத்திக் கப்பம் பெறப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கரன்னகொடவுக்கு தெரிந்திருந்ததாகவும் அது தொடர்பான ஆதரங்களை மறைத்துள்ளதாகவும் இலங்கைச் சட்டமா அதிபர் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சட்டத்தரணி சனத் விஜயவர்த்தனவினால் அட்மிரல் வசந்த கரன்னாகொட சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வருகின்றார்.