கைதுசெய்யப்பட்ட வைத்தியர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த வைத்தியர் தேடப்பட்ட ஒருவர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.இந்நிலையிலேயே இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்றுகூடிய மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
இதன்போது பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் சட்ட வைத்திய அதிகாரியுமான சின்னையா சிவரூபன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் வைத்தியர் கைது செய்யப்பட்டதால் இன்று மாதாந்த சிகிச்சைக்காக வருகைதந்த நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தனர்.
சட்ட வைத்தியர் என்ற காரணத்தின் அடிப்படையிலும் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை சர்வதேச அரங்கில் மூடி மறைக்கும் நோக்கிலும் வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டிருக்கலாமென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறியுள்ளார்.
வைத்தியர் சிவரூபனை சட்டத்தின் முன் நிறுத்தி விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தும் கைதான வைத்தியரின் இடத்துக்கு வேறு வைத்தியர் ஒருவரை தற்காலிகமாக நியமிக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.
பளை வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்களும் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்தி்ற்குத் தெரிவித்தனர்.