இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.
அமெரிக்காவுக்குச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்மன் (Brock Bierman) சந்தித்து உரையாடியிருந்தார்.
எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றியே புரோக் பியேர்மன மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் வழங்கவுள்ள நிதியுதவிகள் குறித்து விளக்கமளித்திருந்தார்.
மைத்திரிபால சிறிசேன இந்தச் சந்திப்புத் தொடர்பாக எதிர்பார்த்திருக்கவேயில்லை. அவருக்கு அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவுமே இருந்ததாக புரோக் பியேர்மன் அப்போது செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிதி 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் வழங்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிதிக் கையளிப்பு நியுயோர்க்கில் இடம்பெறும் எனவும் அந்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள வேண்டுமெனவும் புரோக் பியேர்மன் அப்போது அழைப்பும் விடுத்திருந்தார்.
ஆனால் கொழும்பில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன, ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளும் பௌத்த பிக்குமாரும் எதிர்ப்பு வெளியிட்டதால் இந்த நிதியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடுவதைத் தாமதித்தது.
இலங்கை இராணுவத்திற்கு 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 39 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் நிதியுதவியை வழங்க முன்வந்தது.
இலங்கை இராணுவத்திற்கு 39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நொயட், இந்து சமுத்திர வலய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏழாம் திகதி இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த நிதி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
வெளிநாடுகளின் இராணுவச் சேவைக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கும் 39 மில்லியன் டொலர்கள் நிதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதியை அமெரிக்கக் காங்கிரஸ் வழங்கியிருந்தது. இதனையடுத்தே மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிதியுதவி இலங்கைக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தமது நிலையை உறுதிப்படுத்த அமெரிக்கா மேற்கொண்ட திட்டத்தின் மூலமாகவே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ அப்போது இணங்கியுமிருந்தது.
குறிப்பாக வடக்கில் முல்லைத்தீவில் இருந்து கிழக்கில் திருகோணமலை வரையான கடற்பகுதியையும் கொழும்பு, அம்பாந்தோட்டைத் துறைமுகங்களையும் மையமாகக் கொண்டே இந்த நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் தலைவர் புரோக் பியேர்மன் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து உரையாடியிருந்தபோது இந்த விபரங்களைக் கூறியிருந்தார்.
கடன்களில் இருந்து மீள்வதற்கும் உள்ளக அபிவிருத்திக்கும் ஏற்ற முறையில் MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிதியுதவிகள் மேலும் அதிகரிப்பதற்கு ஏற்ற முறையிலும் இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தமும் செய்யப்படவுள்ளது.
இந்த நிதியுதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தில் அம்பாந்தோட்டை, திருகோணமலைத் துறைமுகங்களின் பயன்பாடுகள் முக்கியமானதாக அமையவுள்ளன. அத்துடன் கொழும்பின் உப நகரமாக திருகோணமலை மாற்றியமைக்கப்படவுள்ளது. அதற்கான கொழும்பு- திருகோணமலை அதிவேகச் சாலைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதிவேகச் சாலைக்கான வரைபடம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க இராணுவ நலன்கள் எதுவும் இல்லையென்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டுமான அபிவிருத்திகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.
எவ்வாறாயினும் இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் முழுமையாக வெளிவரவில்லை. இதனாலேயே பௌத்த அமைப்புகள் குழப்பமடைந்துள்ளன. கடும் எதிர்ப்புகளையும் வெளியிட்டு வருகின்றன.
இந்த நிதியுதவிகள் குறித்துப் புதுடில்லியுடன் பேசப்பட்டிருப்பதாகவும் இந்தியாவின் ஒத்துழைப்புக் கிடைக்குமெனவும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரியொருவர் ஏலவே நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
எனவே எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றிபெற்றாலும் MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் நிதியுதவியை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டே ஆக வேண்டும் என்பதை அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளின் சமகாலச் செயற்பாடுகள் கோடிகாட்டுகின்றன.
இந்த ஒப்பந்தத்தின் பின்னணியிலேதான் அமெரிக்க அரசு இலங்கையோடு சேபா ஒப்பந்தத்தையும் கைச்சாத்திடத் திட்டமிட்டுள்ளதாக அத்துரலியே ரத்னதேரர் குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கான பேச்சுக்கள் அதிகாரபூர்வமாக இலங்கை அரசின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளோடு நடைபெற்று வருவதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் இதற்கான பேச்சுக்களில் ஈடுபடுவதாகவும் தேரர் கூறுகிறார்
இந்த நிலையில் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிதியுதவியைப் பெறமாட்டோமெனப் பிரதான வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் இடித்துரைக்கின்றனர்.
எனினும் பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களின் மன நிலை தமக்கு நன்கு தெரியும் என்றும், பிரச்சாரங்களில் அமெரிக்காவுக்கு எதிராக வெளியிடப்படும் வேட்பாளர்களின் கருத்துக்கள் குறித்துத் தாம் ஒருபோதும் அலட்டிக்கொள்ளவேயில்லை எனவும் தூதரக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
ஆனாலும் MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடக் கூடாதெனக் கோரி சட்டத்தரணியொருவர் இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைக் கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளார்.