பூலாக்காடு, வாகனேரி ஆகிய கிராம சேவகர் பிரிவிலுள்ள குளத்துமடு, சந்தியாத்துப்பாலம், பெட்டைக்குளம் ஆகிய இடங்களில் இருந்து மணல் அகழ்வு இடம்பெறுகிறது. புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்ட போதிலும், வழங்கப்பட்ட அனுமதியை விட கூடுதலான அளவு ஒரு நாளைக்கு அகழ்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிய மணல் அகழ்வினால் நாசிவந்தீவு மக்களின் குடியிருப்பு பாதிக்கப்படுவதாக கூர்மைச் செய்தித் தளத்தில் ஏலவே செய்தி ஒன்றும் வெளியாகியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மண் அகழ்வு நடவடிக்கைகள் இலங்கைப் பொலிஸாரின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றன.
கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமாக பின்னடைவிலுள்ள உள்ள இங்குள்ள மணல் சட்டவிரோதமாக அகழ்வு செய்யப்படு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு மணல் அகழ்வு செய்யப்படுவதனால் மழைக் காலங்களில் இப்பகுதி அதிகளவான நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பலதடவைகள் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு மாவட்டச் செயலகம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் ராஜ்பாபு தெரிவித்தார்.
சட்டவிரோத மண் அகழ்வை உடனடியாத் தடுக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.