இது குறித்து மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர்.
இலங்கைப் பொலிஸாரும் இலங்கை இராணுவமும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைப் படையின் ஒத்துழைப்புடன் தமது மீன்பிடி உபகரணங்கள் தீயிடப்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
நேற்றுத் திங்கட்கிழமை மாலை நாயாறு கடல் பகுதியில் சட்டத்திற்கு முரணாக ஒளிபாய்ச்சி மீன்பிடித்தலில் சிங்கள மீனவர்கள் ஈடுபடத் தயாரானபோது, அதனை அவதானித்த தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வாக்குவாதமும் எற்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தின் பின்னரே நேற்றிரவு 11.30க்கு தமிழ் மீனவர்களின் பெறுமதியுடைய மீன்பிடி உபகரணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக, இலங்கை கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, தனது சிங்கள அதிகாரிகளுடன் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவுக்குச் சென்றிரு்ந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள். மி்னவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருடனும் கலந்துரையாடினார்.
சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
ஆனாலும் சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவுக் கடலில் மீ்ன்பிடிப்பதற்கு அனுமதி உண்டு எனவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அங்கு கடும் தொனியில் கூறியிருந்தார்.
ஆனாலும், சட்டவிரோத மீ்ன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தும் எனவும் அமைச்சர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ் மி்னவர்களின் உபகரணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கொழும்பில் நடத்தப்படவிருந்த சந்திப்பை முல்லைத்தீவு மி்னவர்கள் புறக்கணித்த நிலையில் அமைச்சர் முல்லைத்தீவுக்குச் சென்று கலந்துரையாடியிருந்தார்.
முல்லைத்தீவுக் கடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடற்றொழில்களால், தமது வாழ்வாதாரத் தொழில், முழுமையாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, முல்லைத்தீவு மீனவர்கள், கடந்த 2 ஆம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தி வந்தனர்.
அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுடனான சந்திப்பையடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாயாற்றில் சுமார் 400 தொடக்கம் 500 வரையான சிங்கள மீனவக் குடும்பங்கள் தற்காலிக மீன்பிடித்தொழிலுக்காக கொட்டகை அமைத்துத் தங்கியுள்ளனர்
நாயாற்றின் - ஆழ்கடலையும், நீரேரியையும் இணைக்கும் தொடுப்பில் மிகவும் பெரியளவிலான இலங்கை கடற்படை முகாம் ஒன்று உள்ளது. இந்தக் கடற்படை முகாம் தான், சிங்கள மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி வருவதாக மி்னவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கடற்படை முகாமோடு உல்லாச விடுதி ஒன்றும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.