கொழும்பில் சிங்கள செய்தியாளர்கள் சிலரும் கொல்லப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 48 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கட்டுரையை எழுதியவரின் பெயர் விபரங்களை எவ்வாறு இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்க முடியும் என்றும் காண்டீபன் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இலங்கை அரச படைகளின் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன எழுதிய றோட் ரூ நந்திக்கடல் (Road to Nanthikkadal) என்ற நூலில் பிரிகேடியர் பால்ராஜ் உட்பட புலிகளின் மூத்த தளபதிகளின் வீரதீரச் செயல்களையும், இலங்கைப் படைகளை நிலைகுலையச் செய்த தாக்குதல்கள் குறித்தும் விபரிக்கப்பட்டுள்ளதென்றால், பால்ராஜ் தொடர்பாக தமிழ் பத்திரிகைகளில் கட்டுரைகள், செய்திகளை ஏன் வெளியிட முடியாதெனவும் காண்டீபன் கேள்வி எழுப்பினார்.
கட்டுரை எழுதியவரின் விபரங்களை குறித்த வார இதழின் ஆசிரியரிடம் கேட்டது போன்று, மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த முடியுமா என்றும் நீதிமன்றத்தில் வினா எழுப்பினார்.
கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ்த் தந்தி, வார இதழில் விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத் தளபதி அமரர் பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பாக 27-05-2018 அன்று அந்நியன் என்ற புனை பெயரில் வெளியான கட்டுரை ஒன்றை எழுதியவரின் உண்மையான பெயர் விபரங்களை வழங்குமாறு இலங்கைக் குற்றத் தடுப்புப் பிரிவு குறித்த பத்திரிகை ஆசிரியரிடம் கேட்டிருந்தது.
ஆனால் இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் ஒழுக்க விதிகளுக்கு அமைவாக கட்டுரை எழுதிய எழுத்தாளரின் பெயர் விபரங்களை தரமுடியாதென குறித்த வார இதழின் ஆசிரியர் கூறியுள்ளார்.
இதனால் குறித்த பத்திரிகை ஆசிரியருக்குக் கட்டளையிடுமாறு கோரி குற்றப்புலனாய்வுப் பிரிவு யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி காயத்திரி சைலஜன் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது அந்த வார இதழின் சார்பில் முன்னிலையான பிரதான சட்டத்தரணி காண்டீபன், குறித்த கட்டுரையை எழுதியவரின் பெயர் விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவு கேட்பது, அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையைத் தோற்றுவிக்கும் என்றார்.
அத்துடன் 1973 ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஐந்தாம் இலக்கச் சட்டத்தின் கீழான 14-10-1981 அன்று வெளியிடப்பட்ட இலங்கை ஒற்றையாட்சி அரச வர்த்தமானி இதழின் இலக்கம் 162- 5/A பிரிவு நான்கில் கூறப்பட்டுள்ள தகவலைப் பாதுகாத்தல் இரகசியம் பேணுதல் உள்ளிட்ட விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.
எழுதியவர் தகவல் மூலத்தை வெளியிட மறுத்தால் அதனைக் கோர முடியாது என்றும் குறித்த வர்த்தமானி இதழில் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள பத்திரிகைகளுக்கான ஒழுங்கு விதிகளில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் சட்டத்தரணி காண்டீபன் எடுத்துக் கூறி, அந்த ஒழுக்க விதிகள் அடங்கிய கையேடு ஒன்றின் பிரதியையும் மன்றில் சமர்ப்பித்தார்.
பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பாக பிரபல அரசியல் பத்தி எழுத்தாளர். டி.பி.எஸ். ஜெயராஜ் கொழும்பில் இருந்து வெளிவரும் டெயிலிமிரர் ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரைகளையும் மன்றில் சமர்ப்பித்தார்.
குறிப்பாக பிரிகேடியர் பால்ராஜ் அச்சமடையாத முன்னிலைத் தளபதி (Brigadier Balraj LTTEs fearless front line commander) என்ற தலைப்பில் 21-05-2011 ஆம் ஆண்டு அன்றும், புலிகளின் மரபு வழி இராணுவத் தளபதி (Legendary commander of the LTTE) என்ற தலைப்பில் 23-05-2011 அன்றும் எழுதிய இரண்டு கட்டுரைகளையும் ஏனைய தமிழ் வார இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளையும் சமர்ப்பித்தார்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கைப் படைகளின் 58 பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தனது நூலில் எழுதிய விபரங்களையும் மன்றில் வாசித்தும் காண்பித்தார் சட்டத்தரணி காண்டீபன்.
இந்தக் கட்டுரைகளை மேற்கோள் காண்பித்து சத்தியக் கடதாசி ஒன்றையும் மன்றில் சமர்ப்பித்தார். இதனையடுத்து விசாரணையை எதிர்வரும் 29 ஆம் திகதி வியாழக்கிழமை வரை பதில் நீதவான் ஒத்திவைத்தார்.
29 ஆம் திகதியன்று யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி, போல் முன்னிலையில் விசாரணை நடைபெறும்.
இதேவேளை, 1973 ஆம் ஆண்டு ஐந்தாம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட இலங்கைப் பத்திரிகைப் பேரவை, ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பான சட்டம் அல்ல என்று ஊடக அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
தகவலைப் பாதுகாத்தல், இரகசியம் பேணுதல் போன்றவற்றை உரிய முறையில் பேண முடியாதென்றும் இந்தச் சட்டத்தின் பிரகாரம் நீதிபதி மூடிய அறை ஒன்றில் வைத்து இரகசியமான முறையில் கட்டுரையை எழுதியவரின் பெயர் விபரங்களையோ அல்லது கட்டுரை, செய்திகளின் மூலங்களையோ பத்திரிகை ஆசிரியரிடம் காதுக்குள் கேட்க முடியும்.
இதனாலேயே, இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் செயற்பாடுகளை செயலிழக்கச் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஆனாலும் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அப்போது இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த கலாநிதி சரத் அமுனுகமவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட பரிந்துரைகள், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக இலங்கை அரசாங்கம் நம்புகின்றது.
எனினும், இலங்கை ஒற்றையாட்சி அரசின் அந்த வர்த்தமானி இதழில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் பிரதான மூலச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.
இதனால் பத்திரிகைப் பேரவையின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றே ஊடக அமைப்புகள் 1998 ஆம் ஆண்டில் இருந்து வலியுறுத்தி வந்தன.
இதன் காரணமாகவே இலங்கை அரசியல் யாப்புச் சட்டத்தின் பிரகாரம் 1995ஆம் ஆண்டு பதினொராம் இலக்கச் நடுத்தீர்ப்புக்கான சட்டத்தின் (Arbitration acct) அடிப்படையில் 2003 ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்த நடுத்தீர்ப்புச் சட்டத்தின் படி அனைத்துத் துறைகளுக்கும் ஆணைக்குழுக்களை அமைக்க முடியும். அதாவது இரண்டு நபர்களுக்கிடையே அல்லது இரண்டு தரப்புக்கிடையே பிணக்குகள் எழுந்தால், இரு தரப்பிலும் உள்ள முக்கியத்தர்களை நடுவர்களாகக் கொண்ட குழுவை உருவாக்கி அதன் மூலம் பேச்சு நடத்தி இணப்பாட்டை ஏற்படுத்தலாகும்.
ஆகவே இந்த நடுத்தீர்ப்புச் சட்டத்தின் கீழான பத்திரிகை முறைப்பபாட்டு ஆணைக் குழுவிற்கு செய்திகளின் தகவல் மூலங்களையும் அதன் இரகசியத்தையும் பாதுகாக்கும் எந்தவொரு ஏற்பாடுகளும் அதிகாரங்களும் இல்லை.
ஊடகவியலாளர்கள். ஊடக நிறுவனங்களுக்கான பாதுகாப்புச் சட்டம் என்று இந்த பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவைக் கூறவும் முடியாதென சில ஊடக அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
அதேவேளை, இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைமுறைக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் கூறப்பட்டிருந்த பாதுகாப்புக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தாலும், குறித்த தகவல் ஒன்றை யாரும் கோரினால். அதனை வழங்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்த முன்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டபோது, பிரிவு ஐந்தில் பாதுகாப்புக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால் குறித்த தகவல் ஒன்றை வழங்க முடியாதெனக் கூறப்பட்டிருந்தது.
ஆனாலும் விவாதம் நடைபெற்று சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் குறித்த பிரிவு ஐந்து, அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள் தமது பாதுகாப்பைக் காரணம் கூறி தகவல் மூலத்தை வழங்குவதில் இருந்து தப்பித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் பிரிவு ஐந்தில் கூறப்பட்டிருந்ததை அரசாங்கம் நீக்கியிருக்கலாம்.
எனினும் அது செய்தியாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தில் விடுக்கும் ஒரு நிலைமையை தோற்றுவித்துள்ளதாகவே ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.