வடமாகாணத்தின்

கிளிநொச்சியில் வாள்வெட்டு- கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் காயம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் - பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் தகவல்
பதிப்பு: 2019 மே 30 00:24
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மே 31 01:39
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#Swordattack
#lka
#Northernprovince
#Tamils
#Srilanka
இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிளிநொச்சி - செல்வாநகர் பகுதியில் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் போது 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட ஆறு பெண்களும் ஆறு ஆண்களுமாக ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். நேற்றுப் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வாள்களுடன் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டோர் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்களில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

இதன்போது கடுமையான வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் சம்பவம் இடம்பெற்ற வீடுகளெங்கும் அதிகளவு இரத்தம் படிந்து காணப்படுவதாகவும் தற்காலிக வீடு ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இரு வீடுகள் மற்றும் உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

வாள்வெட்டுத் தாக்குதலை அடுத்து கிளிநொச்சி பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றதுடன் சம்பவம் தொடர்பாக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்கானோரில் ஒரு குடும்பத்தினர் தமக்கு ஒரு சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சென்ற செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் எனினும் பொலிஸார் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.