முஸ்லிம் மக்களை தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்க அனுமதிக்கக் கூடாதென ஞானசார தேரர் கூறியிருந்த நிலையில், பதவி விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க வேண்டுமென மகாநாயக்கத் தேரர்களும் சென்ற வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தனர்.
இன்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த முஸ்லிம் உறுப்பினர்கள், ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் ஆதரவு இல்லையென்பதைத் தெளிவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர்களிடம் கூறினார்.
மகிந்த ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்த காலத்தில் அமைச்சர்களாகப் பதவி வகித்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியமை குறித்து எடுத்துக் கூறியதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில் குற்றம் சுமத்தப்பட்ட ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மகிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்காப் பொது ஜனப் பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் பீரிஸ் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் இல்லாதொழிக்கப்பட்டாலும், அதன் பின்னரான சூழலிலும் ஈழத் தமிழர்கள் தங்கள் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், இலங்கைத் தீவில் வாழும் முஸ்லிம் மக்களை தற்போதைக்கு ஓதுக்க முடியாதென ஞானசார தேரர், மகாநாயக்கத் தேரர்களிடம் எடுத்துக் கூறியதாக பொதுபல சேனாத் தகவல்கள் கூறுகின்றன.
முஸ்லிம் அரசியல்வாதிகளை விட சாதாரண முஸ்லிம் மக்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொர்புடைய முஸ்லிம் தீவிரவாதிகளைக் கைதுசெய்வதற்கு இலங்கை இராணுவத்துக்கு உதவியளித்திருந்தாகவும் ஞானசார தேரர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இதன் பின்னணியிலேயே மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பு இடம்பெற்றிருக்கலாமெனக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட தமிழத்தரப்புப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க வேண்டுமானால் சிங்கள அரசியல் தலைவர்கள் அரசியல் காரணிகளை மையப்படுத்திச் செயற்படக் கூடாதென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க அல்ஜிஹாத் அல்கைதா என்ற நூல் ஒன்றை 2003 ஆம் ஆண்டு கொழும்பில் வெளியிட்டிருந்தார். பின்னர் மேலும் பல விடயங்களை இணைந்து அந்த நூலை 2013 ஆம் ஆண்டு மீள் பதிப்புச் செய்திருந்தார்.
தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் கிழக்கு மாகாணத்தில் தனிநாடு கோரியவர்கள். முஸ்லிம் தலைவர்கள் சிலர் ஒலுவில் பல்கலைக்கழகத்தில் ஒன்றுகூடி ஒலுவில் பிரகடனத்தை வெளியிட்டுமுள்ளனர்.
இலங்கையை எவரும் உரிமை கொண்டாட முடியாது இலங்கை சிங்கள பெளத்த நாடு என்று மீள பதிப்புச் செய்யப்பட்ட அந்த நூலை 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி வெளியிட்டு உரையாற்றியபோது சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியிருந்தார்.
தீகவாபி புனித பிரதேசம் பெளத்த வரலாற்றுப் பிரதேசமாகும். தீகவாபியை கைப்பற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முற்படுகின்றது. பன்னிரன்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த புனித பூமிப்பிரதேசம் தற்போது 656 ஏக்கராக மாறியுள்ளது.
பெளத்த விகாரைப் பிரதேசங்கள் பெளத்த மரபுரிமைகள் புல்டோசர்களினால் அழிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தியே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார்.
சம்பிக்க ரணவக்க 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தார். பின்னர் மகிந்தவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் இணைந்து இன்று வரை அமைச்சராகப் பதவி வகிக்கின்றார்.