இலங்கையில் இருந்து சிரியாவிற்கு முப்பது, நாற்பது குடும்பங்கள் சென்று வந்தமை தொடர்பாக இனம் காணப்பட்டு அவர்கள் பற்றி விபரங்கள் அடங்கிய இறுவெட்டுக்களை முதலாம் திகதி ஜனவரி மாதம் 2019 ஆம் ஆண்டு அன்று இலங்கைப் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோவைச் சந்தித்து கையளித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸர்க்கான் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றையும் இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் சென்ற ஜனவரி மாதம் கையளித்திருந்ததாகவும் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
ஸர்க்கான் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு என்றும் ஸர்க்கானுடன் மொத்தம் பன்னிரண்டு அமைப்புகள் இணைந்து செயற்பட்டதாகவும் இந்நதியாவின் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்புடன் இணைந்து இயங்கியதாகவும் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி கூறினார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் ரமழான் மாதத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜிஹாத் புத்தகம் வைத்திருந்த குற்றத்தில் முஸ்லிம் மக்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகவும் மோசமான முறையில் முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் இலங்கை இராணுவத்தால் துன்புறுத்தப்பட்டுமுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை இலங்கை அரசாங்கத்தால் எவ்வாறு இல்லாதொழிக்க முடியுமென அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.
தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசீம், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி தமது அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்ளச் செய்ததாக கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் அசாத்சாலி தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அவர் சாட்சியமளித்தார். சஹ்ரானின் பேச்சுக்களுக்கு கிழக்கு மாகாண மக்கள் செவிமடுத்து வந்தனர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு சஹ்ரான் உதவியளித்ததாகவும் அசாத்சாலி கூறினார்.
கிஸ்புல்லா ஸஹ்ரான் ஹாசீமோடு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு அதன்படி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகவும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பலவற்றுக்கு ஸஹ்ரான் ஹாசீம் காரணமெனவும் அசாத்சாலி மேலும் தெரிவித்தார்.