மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சு நடத்தி வரும் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி, நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை அதிபர் தெரிவு வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றது.
இது தொடர்பாக மகிந்த தரப்போடு ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் மத்திய குழு, வேட்பாளாராக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதென தன்னிச்சையாக முடிவு செய்யப்பட்டுள்ளதென கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் அதிகாரபூர்மாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
மைத்திரியை, அதிபர் தெரிவு வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்குமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் மைத்திரிபால சிறிசேனவை அதிபர் தெரிவு வேட்பாளராக நியமிப்பதாகத் தீர்மானிக்கவில்லையென்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை அதிகாரபூர்வமாகக் கூறவில்லை.
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டாபய ராஜபக்சவை அதிபர் தெரிவு வேட்பாளராக களமிறக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. இதனால் மைத்திரிபால சிறிசேனவை அதிபர் தெரிவு வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டுமென உள்ளக அழுத்தங்கள் கட்சிக்குள் அதிகரித்துள்ளன.
மகிந்த ராஜபக்ச தரப்புடனான பேச்சுக்களில் தன்னை அதிபர் வேட்பாளராக்குவது என்ற அணுகுமுறை தவறினால், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசாவை அதிபர் தெரிவு வேட்பாளராக தெரிவு செய்து, தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதென மைத்திரிபால சிறிசேன தீர்மானித்து வருவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்பில் இருப்பதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. சஜித் பிரேமதாசாவும் மைத்திரியோடு தொடர்பில் உள்ளாரென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக மைத்திரிபால சிறிசேனவுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாட வேண்டாமென ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு ஏலவே உத்தரவிட்டிருந்தார்.
எனவே, இரண்டு வகையான அணுகுமுறைகளை மைத்திரிபால சிறிசேன கையாளுகின்றாரென கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லையென மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாக சிங்கள ஊடகங்களில் ஏலவே செய்திகள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, அதிபர் தெரிவு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியுமென்ற நம்பிக்கையுடன் சர்வதேச ஆதரவுகளை தமக்கு ஏற்றவாறு சாதகமாக்கும் முயற்சியிலும் பிரதான சிங்கள அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபடுகின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியுடன் மைத்திரியின் பதவிக் காலம் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.