2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி- ரணில் அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென சர்வதேச நாடுகளினால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் அதற்குப் பதிலான புதியதொரு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுமென இலங்கை அரசாங்கம் கூறியிருந்து.
தற்போது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னரான சூழலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடான சட்டம் ஒன்றை அவசரமாக உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது முதற்கட்ட வரைபில் உள்ள விதப்புரைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்தப்பட்டு விரைவில் முழுமையான புதிய சட்டம் அமுலுக்கு வருமெனவும் கூறப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே புதிய சட்ட மூலத்துக்கான ஆரம்ப வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல பிரிவுகள் புதிய நகல் சட்டமூலத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் வேறுபாடுகள் எதுவுமே இல்லையெனவும் ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரட்ணாயக்கா கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சி பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுவதை முற்றாக எதிர்க்கின்றது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கருத்துக் கூறாமல் அமைதியாகவுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் ஏற்கக் கூடியதல்ல என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஏற்கனவே இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.
உயிரத்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகள், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டமே வேண்டாமென்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக புதிய சட்டமூலம் அமுல்படுத்தப்படுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகின்றார். ஆனால் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்.
மகிந்த ராஜபக்ச தப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவின்றி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்தி ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தை எவ்வாறு நிறைவேறவுள்ளதெனக் கேள்விகள் எழாமலில்லை.
1979 ஆம் ஆண்டு இலங்கை நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்பட்டு 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது ஜே.ஆர் ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் ஐந்தில் ஆறு பெரும்பான்மை இருந்தமை குறிப்பிடத்தக்கது.