ஈழத் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய ஒட்டுசுட்டான் தான்தோன்றீவரர் ஆலயத்தோடு தொடர்புடைய வாவெட்டிமலை ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. தொல்பொருள் வலயமாக வாவெட்டிமலை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் இலங்கைத் தொல்பொருள் ஆராட்சித் திணைக்களம் அதனைப் பராமரிப்பதில்லை.
இந்த மலையில் கல் அகழ்வு இடம்பெறுவதற்கு இலங்கைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒத்துழைப்பதாகப் பிரதேச மக்களும் குற்றம் சுமத்துகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடைய வாவெட்டி மலையிலுள்ள வாவெட்டி ஈஸ்வரர் ஆலயத்தில் சென்ற பதின்நான்காம் திகதி மக்கள் வழிபாடுகளி்ல் ஈடுபட்டிருந்தனர்.
எனவே ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள வாவெட்டி மலையானது தமிழர்களின் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றெனக் குறிப்பிட்ட சத்தியசீலன் தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலம் முதல் 2009 ஆம் ஆண்டு வரை சிறப்பாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்ததாக சுட்டிக்காட்டினார்.
வாவெட்டி மலையில் இரண்டு கல் அகழும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பெருமளவில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒரு வருடத்தில் 600 கியூப் கல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தற்போது மூவாயிரம் கியூப் கல் அகழப்படுவதாக விசனம் வெளியிட்டார்.
இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றாக வாவெட்டி மலை காணப்படுகின்றது. ஆனால் தொல்பொருள் திணைக்களம் இதனைப் பாதுகாக்கக் தவறிவருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
தமிழர்களுடைய மரபுரிமைகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூர்மை செய்தித் தளத்திற்கு அவர் குறிப்பிட்டார்.
நாளொன்றுக்கு அதிகளவான கனரக வாகனங்கள் குறித்த பகுதிக்கு வந்து செல்வதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழர் பாரம்பரிய மரபுரிமைகளை அழிக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நடவடிக்கைக்கு வாவெட்டி மலையும் இலக்காகி விடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள இரண்டு தனியார் நிறுவனங்கள் கொழும்பு நிர்வாகத்திடம் அனுமதியைப் பெற்று இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கருங்கற்களை அகழந்தெடுத்து கொழும்புக்கு ஏற்றுவதாகப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்
ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் வன்னியை ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் இந்த ஆலயத்தை உருவாகியிருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளதென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.