இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கை அனைத்து நாடுகளுடனும் சேர்ந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கருத்து வெளியிட்ட ருவான் விஜயவர்தன, பிராந்தியத்தில் ஜப்பான் இலங்கை ஆகிய நாடுகள் முக்கியத்தும் பெறுவதாகவும் கூறியுள்ளார்.
இங்கு கருத்து வெளியிட்ட ஜப்பானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரதா, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்புச் செயற்பாடுகள் கடந்த சில வருடங்களாக மேலும் அதிகரித்து வருதாகக் கூறினார்.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா (Akira Sugiyama) இலங்கை முப்படைகளின் தளபதிகள், இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், ஜப்பான் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இலங்கை ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த அக்கறை கொண்டுள்ளதாக, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்னர் ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரதா, மைத்திரிபால சிறிசேனவை அவருடைய அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன, பிராந்தியப் பாதுகாப்புடன் கடல் பாதுகாப்பையும் ஜப்பானுடன் சேர்ந்து உறுதிப்படுத்த வேண்டிய தேவை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையின் அபிவிருத்திக்காக இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்ட முத்தரப்பு உடன்படிக்கை பிராந்தியப் பாதுகாப்புக்கு முக்கியமானதென்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடம் கையளிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை மைத்திபால சிறிசேன கடந்த ஆண்டு ஒக்ரேபார் மாதம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆனால் தற்போது ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் இணைந்து இலங்கை மேற்கொள்ளும் அபிவிருத்திச் செயற்பாடுகளை மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார். இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு இலங்கை உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சிங்கள ஆட்சியாளர்களின் பிரதான நோக்கம் என்பதை இ்ந்தப் பாராட்டுக் காண்பிப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அணி இருப்பது போன்று, இந்தோ - பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்திய இன்னுமோர் இராணுவப் பாதுகாப்பு அணி ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது.
குவாட் (quad) எனப்படும் இந்தப் பாதுகாப்பு அணியை அமெரிக்கா, இந்தியா அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த நான்கு மைய அணிகளுக்கிடையேயும் இராணுவ இரகசியங்களை ஒரேவிதமாகப் பரிமாறும் தொழில் நுட்பம், ஒரே வகையான கடற்படைத் தளங்களையும் போர் விமானங்களையும் பயன்படுத்தக்கூடிய நெருக்கமான அணியாகச் செயற்படும் வகையில் குவாட் அமைக்கப்பட்டுள்ளது
இந்த இராணுவ அணியோடு இணைந்து தென்னிந்தியக் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நகர்வுகள், அற்கான செயற்திட்டங்களை வகுத்தல் போன்ற பொறுப்புக்களை அமெரிக்கா, நரேந்திர மோடி அரசிடம் கையளித்துள்ளது.
இதன் பின்னணியிலேதான், இலங்கை ஒற்றையாட்சி அரசு ஜப்பானுடன் செய்துள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நோக்க முடியும்.