கொழும்பு நிர்வாகத்தை மையமாகக் கொண்ட துறைமுகங்கள் அதிகாரசபையின் கீழ் செயற்படும் மயிலிட்டித் துறைமுகத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் நீண்டகாலமாகத் தரித்து நிற்கின்றன. அந்தப் படகுகள் பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அபிவிருத்தியென்ற பெயரில் தமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதாகவும் மீனவர்கள் கவலைப்படுவதாக வினோத்குமார் கூறினார்.
1990 ஆம் ஆண்டு இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்று மக்கள் மீண்டும் 2017 ஆம் ஆண்டு இங்கு குடியமர்த்தப்பட்டனர். ஆனாலும் முழுமையாகக் காணிகள் கையளிக்கப்படவில்லை.
இங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரங்களோ வீட்டு வசதிகளோ ஏனைய கட்டமைப்புகளோ இங்கு முழுமையாக செய்து தரப்படவில்லை. சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், முன்பள்ளி வசதிகளோ எவையும் இதுவரை ஏற்படுத்தித் தரப்படவில்லை.
மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்காக வாழ்வாதார வசதிகளோ உட்கட்டமைப்பு வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இடப்பெயர்வுக்குப் பின்னர் மற்றவர்களுக்கு முன்னால் கைகட்டிக்கொண்டு நிற்கவேண்டிய நிலையில் மயிலிட்டி மீனவர்களின் நிலைமை காணப்படுகின்றது.
மயிலிட்டி இலங்கையின் 22 ஆவது துறைமுகமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிங்கள மீனவர்களின் படகுகளும் இங்கு வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் கற்பிட்டி சிலாபம் போன்ற துறைமுகங்களிலிருந்து வரும் மீன்பிடிப் படகுகள் இங்கு வந்து மீன்களை இறக்கிவிட்டு மீண்டும் தமது இடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடுகின்றன. இதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள இலங்கைத் துறைமுகங்கள் அதிகாரசபை வழங்கியுள்ளது.
இதனால் மயிலிட்டி மீனவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறியும் இதுவரை நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. கொழும்பு நிா்வாகம் நேரடியாகத் தலையிடுவதால் யாழ்ப்பாண செயலக அதிகாரிகளும் அமைதியாக உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.