இந்த நிலையில் யாழ்பபாணம் வலிகாமம் வடக்கு தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். வலி- வடக்கு கிராமங்களில் போருக்கு முன்னரான சூழலில் அதாவது 1946 ஆம் ஆண்டு வெதுப்பகங்கள், சீமெந்து தொழிற்சாலைகளில் பணியாற்றிய சிங்களத் தொழிலாளர்கள் வழிபாடுகளை்ச் செய்வதற்காக இருபது பரப்பு காணியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருந்தது.
ஆகவே அதே காணியில் விகாரை அமையுமாக இருந்தால் அதனை எதிர்க்க முடியாது. ஆனாலும் பௌத்த சிங்களவர்கள் இல்லாத பகுதியில் தனியார் காணியை இலங்கை இராணுவத்தின் உதவியோடு அபகரித்து விகாரை கட்டுவதை ஏற்க முடியாதென அவர் கூறினார்.
விகாரை அமைப்பதற்கு வலிகாமம்- வடக்குப் பிரதேச சபையிடம் பௌத்த தேரரர் ஒருவர் அனுமதி கோரியுள்ளார். ஆனால் தனியார் காணி என்பதால் அனுமதி வழங்க முடியாதென பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
தேரரின் இந்தக் கோரிக்கைக்கு எதிரான நீதிமன்றதில் வழக்கு ஒன்றைப் பிரதேச சபை தாக்கல் செய்யவுள்ளதாகவும் சுகிர்தன் தெரிவித்தார். குறித்த பிரதேசத்தில் விகாரை இருந்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவுமே இல்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
1946 ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தில் பணியாற்றிய சிங்களத் தொழிலாளர்கள் வழிபடுவதற்காக மாத்திரமே விகாரை ஒன்று அன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் போர்க்காலத்தில் அந்த விகாரை கைவிடப்பட்டு தேசமடைந்துள்ளது.
தற்போது அங்கு சிங்களத் தொழிலாளர்கள் எவருமே இல்லாத நிலையில் இலங்கை இராணுவத்தின் உதவியோடு விகாரை அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன என்றும் பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் அங்கு சிங்கள மீனவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு அதனை அண்மித்த தையிட்டிப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் வசமுள்ள காணிகளில் சிங்கள மீனவக் குடும்பங்களைக் குடியேற்ற இலங்கை அரசாங்கம் திட்டமிடுவதாகவும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.