கிளிநொச்சி - கௌதாரிமுனைப் பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வுக்கு இலங்கைப் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்குகின்றமை தொடர்பாக அதிகாரிகள் எடுத்துக் கூறியிருந்தனர்.
மண் அகழ்வை மேற்கொள்ளச் சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கொழும்பை மையமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றினால் கிளிநொச்சி - உருத்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் தொழில்நுட்ப ரீதியான கோபுரங்கள் மக்களுக்கு ஆபத்தானவை என்றும் பிரதேச சபைகளிடம் அனுமதிபெறாமல் தொழில்நுட்பக் கோபுரங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கூட்டத்தில் விசனம் தெரிவித்தனர்.
அதேவேளை பேருந்து நிலையம், விளையாட்டு மைதானம், பூநகரிக் குளம், மாவட்டக் கலாசார மண்டபம், பொதுநூலகம், ஏ-9 சமாந்தர வீதி, பூநகரிக்கான குடிநீர் போன்ற பல திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனாலும் அந்தத் திட்டங்கள் இதுவரை பூர்த்தியடையவில்லை எனவும் அரச அதிபர் கூட்டத்தில் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபைக்குச் சொந்தமான நூலகக் காணியில் உள்ள இலங்கைப் படையினர் வெளியேறி காணியைக் கையளிக்குமாறு பிரதேச சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
குறித்த காணியைக் கையளிக்க முடியுமெனக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைப் படையின் கிளிநொச்சிக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய கூறியுள்ளார். வட்டக்கச்சி விவசாயப் பண்ணை மற்றும் விவசாயப் பாடசாலைக் காணியை இலங்கைப் படையினர் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் கிளிநொச்சியில் மேற்கொள்ளும் திட்டங்களுக்குத் தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டுமெனவும் சிங்கள மொழியிலான பெயர்களைத் தவிர்க்குமாறும் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ் மொழியிலேயே பெயர்கள் வைப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் தீர்மானங்கள், பிரேரணைகள் அனைத்தும் சட்டவலுவற்ற கிளிநொச்சி மாவட்டச் செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சிப் பிராந்தியச் செய்தியாளர் மு.தமிழ்ச்செல்வன் தனது முகநூல்ப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னரும் இப்படிப் பல தீர்மானங்கள், பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவை எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற தொனியில் அவரது முகநூல் பதிவு அமைந்துள்ளது.