ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான ஊடகவியலாளர்கள்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு
வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்கள் 49 பேர் இதுவரை படுகொலை
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 01 23:08
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு:
ஓகஸ்ட் 01 23:38
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான ஊடகவியலாளர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது படுகொலைகளுக்கான நீதி இதுவரை நிலைநாட்டப்படாத நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்கள் நினைவுத் தூபியில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின்போது நினைவு தூபிக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடகக் கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்ப்பாண மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் கடந்த 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தனர்.தமிழர் தாயகப் பகுதிகள் உட்பட ஈழத்தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினராலும் கைக்கூலிகளாலும் அரங்கேற்றப்பட்ட அராஜகங்களை வெளியுலகிற்கு கொண்டுவந்த வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்கள் 49 பேர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.