கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் பத்துக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஐயாயிரத்து நானூற்று எழுபத்தொரு பேருக்கும் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் ஏழு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்து எண்பது பேருக்கும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பதினேழு கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள ஏழாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து மூன்று பேருக்கும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில் எட்டுக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரத்து நாணூற்று எழுபத்திரண்டு பேருக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அரசாங்க அதிபர் கடந்த இருபத்து நான்காம் திகதி வறட்சி தொடர்பான நடவடிக்கைகளுக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 1.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்தத்திற்கு பின்னர், பூநகரி வடக்கு பிரதேசத்திலுள்ள 12 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய காணியில், கடலுக்கு அண்மித்துள்ள ஏழாயிரம் ஏக்கர் காணி, உவர் நீராக மாறியுள்ளது. எஞ்சிய காணிகளில் விளைச்சல் பற்றாக்குறையாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பூநகரிப் பிரதேசத்திற்கு உட்பட்ட ஞானிமடம், செட்டியகுறிச்சி, சித்தன்குறிச்சி, நல்லூர், ஆலங்கேணி போன்ற சகல பகுதிகளிலும் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
பிரதேச சபையினால் வேறு இடங்களிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகின்ற போதிலும் அது போதாமலுள்ளது. இதனால் பிரதேச மக்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தவிர பூநகரியில் உள்ள பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் குடிநீர் இன்மையால் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதேவேளை நன்னீர்க் கிணறுகள் அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை வளாகம் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ளது. இதனால் பூநகரி பிரதேச மருத்துவமனையில் அதிகரித்துள்ள நீர்ப்பற்றாக்குறையால் நோயாளர்களை பராமரிக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்னீர்க் கிணறுகள் ஒருங்கே அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.