இலங்கை ஜனாதிபதித் தேர்தலில்

வேட்பாளர் கோட்டாபய என்பது உறுதி - ரணில் தரப்பில் முடிவில்லை

அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் முக்கிய சந்திப்புகளை நடத்துகிறது
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 09 22:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 10 21:37
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#GotabayaRajapaksa
#slpresidentelection2019
#tamils
#srilanka
#lka
இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுகளில் குழப்பங்கள் முரண்பாடுகளுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச என்பது உறுதியாகிவிட்டதாகக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்சவை நியமிப்பதில் கட்சிக்குள் முரண்பாடுகள் இழுபறிகள் இருந்தாலும் முரண்பாட்டில் உடன்பாடாக கோட்டாபய ராஜபக்சவை நியமிப்பதென உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை மகிந்த தரப்புடன் எந்தவிதமான உடன்பாட்டுக்கும் வரவில்லை.
 
ஆனாலும் தேர்தலில் வெற்றிபெற்றதும் யாப்பில் திருத்தங்களைச் செய்து மைத்திரிபால சிறிசேனவுக்கு உப ஜனாதிபதிப் பதவி அல்லது பிரதமர் பதவி வழங்குவதென மகிந்த தரப்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை ஏற்கவில்லையென கட்சித் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை நியமிப்பது தெர்டர்பாக பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாகப் பேசி வருகிறது.

வடக்கு- கிழக்குத் தாயகப் பகுதிகளில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள். பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் சிலருடன் அமெரிக்கத் தூதரகம் தற்போது நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி கொழும்பில் சந்திப்புக்களிலும் ஈடுபடுவதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடியுள்ளார். ஆனாலும் முடிவுகள் எடுக்கப்படவில்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களிடமும் கட்சியின் நாடாளுமன்றக்குழுவிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்கவிடம் சென்ற திங்கட்கிழமை இரவு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரியவை நியமிப்பதென கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக சஜித் பிரேமதாச கடும் அதிருப்தியும் வெளியிட்டிருந்தார். மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கையின் தலைமைப் பொறுப்பை தன்னால் ஏற்க முடியுமென கட்சியின் மத்திய குழக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.

ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. கரு ஜயசூரியவை வேட்பாளராக நியமிப்பதென முடிவு எடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று முற்பகல் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுடன் உரையாடிய ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மத்திய குழுவோடும் உரையாடுவாரென கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டுமென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.