இந்த நிலையில், மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வாஸ் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டம் சிங்கள மரபுரிமைகளோடு சென்ற வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மந்துவில் திருவேரபுரம், சங்கானை ஆகிய கிராமங்களிலும் இன்று சனிக்கிழமையும் அமைச்சர் சஜித் பிரேமதாச வீடுகளைக் கையளித்துள்ளார்.
கம்முதாவ செமட்ட செவன என்று பெயரிடப்பட்ட அந்த வீடமைப்புத் திட்டத் திறப்பு விழாக்களில் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டார். தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இ.சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இருநூற்று முப்பத்தொன்பதாவது மாதிரிக் கிராமமான ஜோசப்வாஸ் கிராமத்தில் 67 வீடுகளும், 230 ஆவது மாதிரிக் கிராமமான ஜோசப்புரம் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட 28 வீடுகள் உள்ளடங்களாக 95 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி - திருவேரபுரம் கிராமத்தில் இருபது வீடுகளும் சங்கானையில் 36 வீடுகளும் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கிராமங்களில் சிங்கள பௌத்த மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக வீட்டைப் பெற்றுக் கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
சிங்கள பௌத்த மக்கள் இல்லாத தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் தாயகப் பிரதேசங்களில் அமைக்கப்படும் வீடமைப்பு மற்றும் பொதுக் கட்டடங்களில் தமிழர் மரபுரிமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால் திட்டமிடப்பட்ட முறையில் சிங்கள பௌத்த மரபுரிமைகள் வேண்டுமென்றே திணிக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.அமைச்சர்களான சஜித் பிரேமதாச சம்பிக்க ரணவக்க ஆகியோர் வீடமைப்பு மற்றும் மெகா சிற்றி அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் வடக்கு - கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்கள மரபுரிமைகளைத் திணித்து வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தார்.
திருகோணமலை - கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசம், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் போன்ற இடங்களில் பௌத்த தாதுக் கோபுரங்கள், விகாரைகள் அமைக்கப்பட்டு சிங்கள மரபுரிமைகளாக அடையாளப்படுத்தும் திட்டங்களை எதிர்த்துக் கடந்த மாதம் பெரும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனாலும் அதைனப் பொருட்படுத்தாது யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய பிரதேசங்களில் கையளிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களிலும் சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.