யூலீயான் அஸாஞ்சே கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசம் எழுப்பினர். அமெரிக்கா பிரித்தானிய அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிடடனர்.
யூலியான் அஸாஞ்சே கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக உலகில் பரந்து வாழும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் மேற்கொள்ளும் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லையானால், தொழிலாளர்கள் நசுக்கப்படுவதனையும் பேச்சு சுதந்திரத்தையும் எவராலும் காப்பாற்ற முடியாது, எனவே இவ்வாறான செயல்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று கவனயீர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளையும் கைகளில் ஏந்தி வல்லரசு நாடுகளுக்கு எதிராகக் கோஷமிட்டனர். பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
சோசலிச சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் சிங்கள தமிழ் தொழிலாளர்களும் மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டர். கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் பதினொராம் திகதி பிரித்தானியப் பொலிஸாரால் யூலியான் அஸாஞ்சே கைதுசெய்யப்பட்டிருந்தார். பூகோள அரசியல் நகர்வுகள், உள்நாட்டுப்போர்கள், நாடுகளிடையேயான மோதல்கள் உலக அளவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய விடயங்களில் அமெரிக்கத் தலையீடுகள், அமெரிக்க நிலைப்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் பல இரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.