ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய அரசியல் அணியின் பொது வேட்பாளராகக் களமிறங்கும் முயற்சிகளை சஜித் பிரேமதாச தவிர்க்க வேண்டுமென அமைச்சர் ராஜித சேனாரட்ன வலியுறுத்தியுதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். கட்சித் தலைவர் என்ற முறையில் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மத்திய குழுவில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகத் தனிப்பட்ட முறையில் ரணில் விக்கிரமசிங்க பிரேரிக்க முடியாதெனவும் சஜித் பிரேமதாச கூறியதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
மத்திய குழுவை ரணில் விக்கிரமசிங்க விரைவில் கூட்டுவாரென்றும் வேட்பாளர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடத்தப்படுமெனவும் கூறப்படுகின்றது. இதேவேளை கட்சியின் மத்திய குழுவில் பெரும்பான்மை ஆதரவு உள்ள ஒருவரே வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவாரென கட்சியின் தவிசாளர் பகபீர் காசிம் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கரு ஜயசூரியவுக்கு கட்சியின் மத்திய குழுவில் ஆதரவு இல்லையென கட்சித் தகவல்கள் கூறுகின்றன. இதனால் மத்திய குழுவின் அங்கீகாரத்துடன் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாமெனவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.
சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிப்பது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார். தேர்தல் கள நிலைமைகளை அறிந்து இறுதி நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நியமிக்கலாமா என்பது குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீர கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர். 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்க அமைப்பில் மங்கள சமரவீர தீவிர பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.