ஜனாதிபதி கொலைச் சதி மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் ஆகிய சம்பவங்களை அடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி செல்லும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்யவுள்ள மைத்திரிபால சிறிசேன பருத்தித்துறை தீவகம் மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களுக்குச் சென்று பல்வேறு அபிவிருத்தி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி செல்லும் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அரச - தனியார் நிறுவனங்கள் பொது அமைப்புக்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து செல்வோர் தொடர்பான விபரங்களைப் பொலிஸார் அவசர அவசரமாகச் சேகரிப்பதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு கூறினார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறித்த பிரதேசங்களுக்குச் சென்ற பொலிஸார் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் விபரங்களைச் சேகரித்ததாகவும் விண்ணப்பப் படிவங்களைக் கையளித்துள்ளனர் என்றும் மக்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் தென்னிலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் தனியே பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளோடு நின்றுவிடாது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக காலங்காலமாக வாக்குறுதிகளை வழங்கித் தமது வாக்கு வங்கிகளை நிரப்பி அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதைப் போன்று இம்முறையும் தமது வாக்கு வங்கியை நிரப்புவதற்காகவே வடக்கு நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள மைத்திரிபால சிறிசேனவின் விஜயமும் அமையக்கூடும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.