2009 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இறுதிக்கட்ட இனஅழிப்புப் போரின் இறுதி நாட்களில், வவுனியா - ஓமந்தைப் பகுதியில் வைத்து இலங்கை இராணுவத்தின் உத்தரவுக்கு அமைய அவர்களிடம் கையளிக்கப்பட்ட இருபத்தொரு வயதான செல்வராஜா அச்சுதன் என்ற இளைஞன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.
இராணுவத்தினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட தனது மகனைத் தன்னிடம் மீள ஒப்படைக்குமாறும் அல்லது தனது பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி, வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மகிழங்குளம் - ஓமந்தையைச் சேர்ந்த வேலாயுதம் செல்வராசா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நோயின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிப் போராட்டத்தில் ஈடுபட்ட நாற்பது பேர் (பதிவில் உள்ளவர்கள்) உயிரிழந்துள்ள நிலையில், விரைவாக தமது போராட்டத்துக்குத் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் 914 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவுகள் நேற்றுப் புதன்கிழமை மாலை கண்டனப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவரும் தறப்பாள் கொட்டகையின் முன்னால் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மை செய்தித்தளத்திற்குக் குறிப்பிட்டார்.
கண்டனப் போராட்டத்தின் போது மகனைத்தேடி உயிரிழந்தவரது புகைப்படம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளையும் ஏந்தியிருந்ததோடு நீதி வழங்குமாறு வலியுறுத்தி கோசம் எழுப்பினர்.
கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது பிள்ளைகளைத் தேடி போராட்டம் நடத்தி வரும் தாய், தந்தையர்கள் தினம் செத்து வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருவதுடன், சர்வதேச விசாரணையை உள்ளூர் விசாரணையாக மாற்றியமைத்துள்ளது. இருப்பினும் எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.