மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கொழும்புக்குச் சென்று திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
போர் நடைபெற்றபோது 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி அவரது மகன் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
கடந்த பத்து ஆண்டுகளாக தனது மகனைத் தேடிப் பல்வேறு இடங்களிலும் முறையிட்டிருந்தார். மகனை மீட்டுத் தருமாறு கோரி போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் தனது மற்றுமொரு மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கொழும்புக்குச் சென்று வரும் வழியில் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். மனைவி அனுராதபுரம் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் செயற்பாட்டாளரான அமலநாயகி அமலராஜ் மட்டக்களப்பில் சென்ற நான்காம் திகதி விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மகளும் காயமடைந்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடியலைந்த வவுனியா ஓமந்தை மகிழங்குளத்தைச் சேர்ந்த 56 வயதான வேலாயுதம் செல்வராசா என்ற தந்தையும் உயர் குருதி அழுத்தத்தினால் உயிரிழந்தார்.
வவனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த தொளாயிரம் நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.