இவை தொடர்பாகக் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கருத்து வெளியிட்ட உறவினர் சங்கத்தின் வடக்குக் கிழக்கு இணைப்பாளர் யோகராசா கனகரஞ்சினி தமது போராட்டம் தொடரும் என்று கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றது. நீதிகேட்டுப் போராடி இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
மூன்று வருட போராட்டத்திற்கு நீதிகிடைக்கவில்லையென்பதால் சர்வதேச சமூகம் உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இங்கை இராணுவத்திடம் விசாரணைக்காகக் கையளித்த தமது பிள்ளைகள் எங்கே என்றுதான் கேட்பதாகவும், வேறு சிலரை இராணுவம் கைது செய்து சென்றதாகவும் அவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் அவா் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தொிவித்தாா்.
இலங்கை அரசாங்கத்தினால் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்திற்கும் இந்த உறவினர் சங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிப் போரில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் காணாமல் போயிருந்ததாக மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராஜப்பு யோசப் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.