அங்கு கல்முனை வடக்குப் பிரதேசச் செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் மகஜரைப் பெற்றுக் கொண்டார். கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், உறவினர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்குபற்றித் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலும் இன்று போராட்டம் இடம்பெற்றது. தீச்சட்டி எடுக்கப்பட்டு தேங்காய் உடைத்து வழிபாடுகளுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதி கோரி பத்து வருடங்களாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஐம்பது பெற்றோர் தமது பிள்ளைகளைத் தேடிக் களைத்து நோய்வாய்ப்பட்டு இறுதியில் உயிரிழந்து விட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இலங்கை அரசாங்கத்திடம் பல மகஜர்களைக் கையளித்ததாகவும் விபரங்களை வழங்கியதாகவும் ஆனாலும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் செய்தி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டனர்.
ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளைத் திருப்திப்படுத்த இலங்கை அரசாங்கம் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் அந்த அலுவலகத்தில் நம்பிக்கையில்லை என்றும் கூறிய உறவினர்கள், தமது விருப்பத்துக்கு மாறாக வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் கிளை அலுவலகங்களைத் திறந்து வருவதாகவும் குற்றம் சுமத்தினர்.
வடக்கில் கிளிநொச்சி, ஓமந்தை்ப் பிரதேசத்திலும் கிழக்கில் கல்முனையிலும் இடம்பெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான உறவினர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றியதாக ஏற்பாட்டாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
இலங்கைப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சிலர் போராட்டம் நடைபெற்றபோது சிவில் உடைகளில் நின்று தம்மை அவதானித்ததாக ஏற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.