முஸ்லிம் மக்களுக்குக் காணிகள் தேவையென்றால் அதனைச் சட்டவிரோதமாகப் பெறமுடியாதென்றும் கூறிய அத்துரலியே ரத்தன தேரர் இலங்கைப் படையினர் பௌத்த காணிகளைப் பாதுகாக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் இனவாதிகளுக்கு கப்பம் கொடுத்து அரசியலில் ஈடுபடுவதாகவும் அத்துரலியே ரத்தன தேரர் கூறியுள்ளாா். தேரருடன் பௌத்த பிக்குமார் சிலரும் அம்பாறைக்கு வந்திருந்தனர்.
ஆனால் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாகக் கூறி அடையாளமிடப்பட்டு விகாரை நிர்மாணிக்கப்பட்டு வரும் காணி முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமானதென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
குறித்த விகாரை கொழும்பில் உள்ள புத்தாசாசன அமைச்சின் நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்டு வருவதாகவும் இது தொடா்பாக முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
எழுபத்தியிரண்டு ஏக்கர் காணியில் மூன்றில் இரண்டு பங்கு தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமானதென்றும் முஸ்லிம் அமைச்சர்களின் எதிர்ப்புகள் காரணமாகவே பதின் நான்கு ஏக்கராகக் குறைக்கப்பட்டு தற்போது விகாரை அமைக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
குறித்த காணியில் பள்ளிவாசல் ஒன்றும் காணப்படுகின்றது. அந்தப் பள்ளிவாசலுக்குரிய காணியிலேயே பௌத்த சின்னங்கள் இருந்தாகக் கூறி விகாரை கட்டப்படுவதோடு பௌத்த சின்னங்களும் புதிதாக வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்தப் பிரதேசத்தில் கிறிஸ்துவுக்கு முன்னர் பௌத்த விகாரைகளும் பௌத்த சின்னங்களும் இருந்ததாக அத்துரலியே ரத்தன தேரர் கூறுகின்றார். இது தொடர்பாக புதிய வரலாறு ஒன்றையும் எழுதவுள்ளதாக தேரர் கூறியுள்ளார்.
இலங்கைத் தொல்பொருட்த் திணைக்களத்தின் உதவியோடு அங்கு பௌத்த சின்னங்கள், அடையாளங்கள் பொறிக்கப்பட்டு விகாரை ஒன்றும் கட்டப்பட்டு வருகின்றது.
வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச இந்தப் பிரதேசத்தில் விகாரை அமைக்கப்பட வேண்டுமென 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச இந்தப் பிரதேசத்தில் விகாரை அமைக்கப்பட வேண்டுமென 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். அவருடைய அமைச்சின் கீழேயே புத்தசாசன அமைச்சும் செயற்படுகின்றது.
வடக்குக்- கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் ஆயிரம் விகாரைகளைக் கட்ட வேண்டும் என்பது சஜித் பிரேமதாசவின் கொள்கையாகும். 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துரலியே ரத்தன தேரர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை மையமாகக் கொண்ட ஜாதிக ஹெல உறுமயவின் ஸ்தாபக உறுப்பினர். பின்னர் முரண்பட்டு ஹெல உறுமயவில் இருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்பட்டு வருகின்றார்.