சஜித் பிரேமதாசவுடன் சுமார் பதினைந்து நிமிடங்கள் மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளார். புத்தளம் மாவட்டத்தில் கிறிஸ்தவ மாணவர்களின் அறநெறிப் பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாவில் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார்.
அப்போது மைத்திரிபால சிறிசேன தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளதாகக் கூறி சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி தொலைபேசியை அவரிடம் கையளித்தார்.
உடனடியாகத் தனது வாகனத்திற்குள் சென்ற சஜித் பிரேமதாச சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை உரையாடியதாகவும் ஆனால் என்ன விடயம் குறித்துப் பேசப்பட்டதென அவர் ஊடகங்களுக்குக் கூறவில்லையென்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றியே இருவரும் பேசியதாகவும் ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் அணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடுவது தொடர்பாக சஜித் பிரேமதாச இதுவரை சமிக்ஞை எதுவுமே கொடுக்கவில்லை எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.
சஜித் பிரேமதாசவின் இந்த செயற்பாடுகளினால் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு சஜித் பிரேமதாச பயணம் செய்யவுள்ளார்.