முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிஸ்கந்தராஜா, இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள், மாகாணக் காணி ஆணையாளர், உதவிப் பிரதேசச் செயலாளர் மற்றும் காணிகளைக் கையளிக்குமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் கேப்பாப்புலவு மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றுப் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு மக்கள் இலங்கைப் படையினர் அபகரித்துள்ள தமது காணிகளைக் கையளிக்குமாறு கோரி நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாகவும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தொடர்ந்தும் தமது பாரம்பரியக் காணிகளை இலங்கைப் படையினர் தமது பாவனையில் வைத்திருப்பதால், விவசாயச் செய்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலில் பங்குபற்றிய உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
உடனடியாகக் கையளிக்க வேண்டிய காணிகள் தொடர்பாக ஆளுநர் சுரேன் ராகவன, கலந்துரையாடலில் பங்குபற்றிய இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கினார்.
காணிகளைக் கையளிப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் குறிப்பிட்ட சில காணிகளை இலங்கைத் தேசிய பாதுகாப்புக் கருதி தற்போதைக்குக் கையளிக்க முடியாதெனவும் இராணுவ அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
எவ்வாறாயினும் கலந்துரையாடல் சுமுகமாக நிறைவடைந்துள்ளதாக ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் ஊடகவியளார்களிடம் கூறினார். அதேவேளை, காணிகள் கையளிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடருமென கேப்பாப்புலவு மக்களும் தெரிவித்துள்ளனர்.