கட்சியின் மூத்த உறுப்பினர் சபாநாயகர் கரு ஜயசூரிய வேட்பாளராகப் போட்டியிடுவாரெனக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஒன்றில் ரணில் விக்கிரமசிங்க முன்னர் கூறியிருந்தார்.
அதன் பின்னரான நிலையில் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடலாமெனவும் ஐக்கியதேசியக் கட்சித் தகவல்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையிலேயே வேட்பாளர் தெரிவு தொடர்பாக கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்கவே தேர்தலில் போட்டியிடுவாரெனக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
அவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் சஜித் பிரேமதாச கட்சியில் தன்கு ஆதரவான உறுப்பினர்களோடு சேர்ந்து வேறொரு தனிச் சின்னத்தில் போட்டியிடுவாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கி சஜித் பிரேமதாசவை பொது வேட்பாளராக அறிவிக்கத் திட்டமிடுவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் சஜித் பிரேமதாச அதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.