நாளை மறுநாள் வியாழக்கிழமை கூடவுள்ள கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் வேட்பாளர் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படுமென நேற்றுத் திங்கட்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இருவரும் இன்று சந்தித்து உரையாடிய பின்னர் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு இணக்கம் ஏற்பட்டாலும் சில நிபந்தனைகளை ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார். அதனை சஜித் பிரேமதாச ஏற்றுள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் கட்சியின் தலைமைப் பதவியும் பிரதமர் பதவியும் ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்க வேண்டுமென விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சஜித் பிரேமதாச ஏற்றுள்ளதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
இருவரும் சந்தித்து உரையாடியபோது ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த இணக்கம் தொடர்பாக கட்சியின் மத்திய குழுவுக்கும் அறிவிக்கப்படவுள்ளது.
நாளை மறுதினம் வியாழக்கிழமை கூடவுள்ள கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை அரச வா்த்தமானி இதழும் வெளியாகியுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும், மக்கள் விடுதலை முன்னணியெனப்படும் ஜே.வி.பியின் வேட்பாளராக அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுகின்றனர்.