வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நடைப்யணம் நேற்று யாழ் நாவற்குழியை வந்தடைந்தது. ஆறாம் நாளான இன்று வியாழக்கிழமை யாழ் நாவற்குழிச் சந்தியில் இருந்து காலை எட்டு மணிக்கு மீண்டும் ஆரம்பித்த நடைப் பயணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு காலை 9.30க்கு வந்தடைந்தது. திலீபன் வழியில் வருகிறோம் என்ற தொனிப்பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இன அழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச நீதிப் பொறிமுறை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் இந்த நடைப் பயணம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நல்லுாரில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உள்ளூராட்சி சபையின் உறுப்பினர்கள் ஒற்றுமையாகவும் உணர்வு பூர்வமாகவும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
அதேவேளை, தியாகதீபம் திலீபனின் 32 வது நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாகவும் இடம்பெற்றது. நிகழ்வு காலை 9 மணிக்கு ஆரம்பமானது.
நிகழ்வில் திலீபனின் திருவுருவ படத்திற்கான ஈகைச்சுடரினை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஏற்றினர். மன்னார், மட்டக்களப்பு. திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும் தியாகதீபம் திலீபனின் 32 வது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி நல்லுார் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் திலீபன் உண்ணாவிரம் இருந்தார். 26 ஆம் திகதி காலை உயிர் நீர்த்தார்.
1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவத்தை வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்த ராஜீ்வ் காந்தி தலைமையிலான இந்திய மத்திய அரசு, அப்போது ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருந்தது.