ஈழத் தமிழர் பண்பாட்டுப் பெருவிழாவின் முதல் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் வடமாகாண உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் ஈழத் தமிழர் பண்பாட்டுப் பெருவிழா நேற்றுச் சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சிப் பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகியது. பின்னர் ஐந்து மணிக்குப் பசுமைப் பூங்காவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சிறப்பு மண்டபத்தில் இடம்பெற்று, நள்ளிரவு பதினொரு மணிக்கு நிறைவடைந்தது.
அழிந்துவரும் தமிழர் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், அவற்றை வளர்க்கும் நோக்குடனும் இந்தப் பண்பாட்டுப் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஏற்பாட்டுக்குழு கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்திருந்தது.
குறித்த நிகழ்வின் இரண்டாம் நிகழ்வான நேற்றுச் சனிக்கிழமை பாரம்பரிய கலை நிகழ்வுகள் மற்றும், நாடகம், கவியரங்கம், பண்பாட்டை எடுத்தியம்பும் நாடகம் ஆகியன இடம்பெறன.
ஈழத் தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தி கலைச் சேவைபுரிந்த பதினைந்து பேருக்கு அதி உயர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன. சிறப்புக்குழு ஒன்று விருது வழங்கப்படவுள்ள பதினைந்து பேரையும் தெரிவு செய்திருந்தது.